Published : 23 Apr 2020 05:38 PM
Last Updated : 23 Apr 2020 05:38 PM

மருத்துவர்களுக்காக #WeLoveDoctors ஹேஷ்டேக்கை உருவாக்கிய சிவகார்த்திகேயன்: பொதுமக்களுக்கு வேண்டுகோள்

மருத்துவர்களுக்காக ட்விட்டர் தளத்தில் #WeLoveDoctors என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சிவகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைப் அண்ணா நகரைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் எனப் பலரும் வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் மருத்துவர்களுக்கு அன்பும், மரியாதையும் செய்யும்விதமாக #WeLoveDoctors என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"நான் சிவகார்த்திகேயன் பேசுகிறேன். நிறைய பேருக்கு இந்த லுக்கில் அடையாளம் தெரியாது என்பதால் தான் பெயர் சொல்லி தொடங்கினேன். நிறையப் பேர் இந்த மாதிரி தான் இருப்பீர்கள் என நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச காலம் இந்த வழிமுறைகள் எல்லாம் கடைபிடித்துவிட்டோம் என்றால், சீக்கிரம் இது முடிந்துவிடும் என நம்புகிறேன். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். வயதானவர்களையும், குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நமக்காக வெளியே கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கும் அரசாங்கம், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், ஊடகத்துறையினர் என அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இவர்களோடு சேர்த்து இன்னொருத்தருக்கும் நன்றி சொல்லத்தான் இந்த வீடியோ.

அவர்களுடைய உயிர், குடும்பம் என எதைப் பற்றியுமே யோசிக்காமல், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவதற்காக வெளியே வந்து சேவை செய்யும் மனித கடவுள்களான மருத்துவர்களுக்குப் பெரிய நன்றி. அவர்களுக்கு என் சல்யூட். அவர்கள் மீது நமக்கு நிறைய அன்பு, மரியாதை இருக்கிறது என்பதற்காகத் தான் இந்த வீடியோ. அதற்காகவே #WeLoveDoctors என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வந்த செய்திகள், சம்பவங்கள் அவர்களை ரொம்பவே காயப்படுத்தியிருக்கும். நமக்கும் இதைப் பார்க்கும் போது கஷ்டமாக இருந்தது.

இந்த கரோனாவை பற்றிப் பயப்படாமல் யோசிக்காமல் அவர்களுடைய வேலையை சிறப்பாக செய்துக் கொண்டிருக்கிற மருத்துவர்கள், அவர்களுடைய செயல் மூலமாக நமக்காக இருக்கிறார்கள் என நிரூபித்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்காக நாங்க இருக்கிறோம் என்று சொல்கிற நேரம். நீங்களும் உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவை உங்களுக்கு அவர்களைப் பற்றி என்ன தோன்றுகிறதோ அந்த செய்தியை இந்த ஹேஷ்டேக்குடன் சேர்த்துப் பதிவிடுங்கள்.

இந்த ஹேஷ்டேக் மூலமாகவும் நமது அன்பும், மரியாதையும் அவர்களைப் போய்ச் சேரட்டும். இந்த தருணத்தில் அவர்களுக்குத் தேவை அது தான். அனைவருமே செய்வோம் என நம்புகிறேன். உலகின் தலைசிறந்த சொல் செயல். செய்து காட்டுவோம். We Love Doctors”

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x