Published : 09 Mar 2020 07:23 AM
Last Updated : 09 Mar 2020 07:23 AM

திரை விமர்சனம்: வெல்வெட்  நகரம்

முன்னாள் நடிகை, சுற்றுச் சூழல் ஆர்வலர் கவுரி (கஸ்தூரி) மர்ம நபரால் கொல்லப்படுகிறார். அவரது தோழியும் பத்திரிகையாளருமான உஷா (வரலட்சுமி சரத்குமார்), கொலையின் பின்னணியைக் கண்டுபிடிக்க தனது மற்றொரு தோழியான பிரியாவின் (மாளவிகா சுந்தர்) பங்களா வீட்டில் வந்து தங்குகிறார்.

கொலை செய்யப்படு வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிராக தன்னிடம் இருக்கும் ஆதாரத்தை உஷாவிடம் தர விரும்புவதாக சொன்னதால், அந்த ஆதாரத்தை கவுரி எங்கே விட்டுச் சென்றார் என்ற தேடுதலிலும் இறங்குகிறார்.

இந்த சமயத்தில் உஷா தங்கியிருக்கும் வீட்டுக்கு கொள்ளையடிக்க வருகிறது 5 பேர் கொண்ட கும்பல். உஷாவையும் அங்கு உள்ள மற்றவர்களையும் துப்பாக்கி முனையில் சிறைபிடிக் கின்றனர். அந்த ஆபத்தில் இருந்து உஷாவும், மற்றவர்களும் தப்பி னரா, கவுரி விட்டுச் சென்ற ஆதா ரத்தை அவரால் கண்டுபிடிக்க முடிந் ததா, இல்லையா என்பது கதை.

சுற்றுச்சூழலைக் கெடுத்து, லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சதிகளை அம்பலப் படுத்தியதற்காக உலகெங்கும் நூற்றுக்கணக்கான சூழலியல் செயற்பாட்டாளர்கள், பத்திரிகை யாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தை பேசியிருக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது.

ஆனால், சூழலியல் செயல் பாடுகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் சதி ஆகியவற்றை வசனம் வழியே வெறும் தகவல்களால் கடந்து செல்கிறார் இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன். பத்திரி கையாளரின் தேடல், கொள்ளைக் கூட்டத்தின் வன்செயல் என்று ஒரு க்ரைம் த்ரில்லர் படத்துக்கான தொடர் நிகழ்வுகளை ஒரே இரவில், ஒரே வீட்டுக்குள் நிலைகுத்தச் செய்துவிடுகிறார். இதனால் கதை யின் மையக் கருத்தாக அமைந் திருக்க வேண்டிய சூழலியல் பிரச்சினைகளை மேம்போக்காக வும், கொள்ளையர்களின் பிடியில் சிக்குண்டிருக்கும் தருணங்களை தீவிரமாகவும் கையாண்டிருக்கிறார்.

திருட வந்தவர்களுக்கும், அந்த ஆதாரத்துக்கும் தொடர்பு இருக்குமோ என சந்தேகிக்க வைத்து, பிறகு அந்த வீட்டுக்குள் நுழையும் மற்றொரு கதாபாத்திரம் வழியே உருவாக்கியிருக்கும் எதிர்பாராத திருப்பங்கள் மூலம் படத்தின் இடைநில்லா ஓட்டத்துக்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்.

அடுத்து என்ன நடக்கும் என்று ஊகிக்க முடியாமல் இருப்பதும், கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து தப்பிப்பதற்கான முயற்சிகள் அனைத்தும் எதார்த்தத்துக்கு நெருக்கமாக சித்தரிக்கப்பட்டு இருப்பதும் ரசிக்கவைக்கின்றன.

முக்கிய கொலையாளி யார் என்ற உண்மை தெரியவரும்போது, அந்த திருப்பம் வலுவானதாக இருக்கிறது. அதற்குப் பிறகு நடப் பவை சாகசத்தன்மை இல்லா மல், இயல்பாடு இருப்பது எடு படுகிறது.

முதல் பாதியில், தோழியின் மரணத்தால் ஏற்பட்ட துக்கம், உண்மையை அறிந்துகொள்ளும் பத்திரிகையாளரின் தீவிர முனைப்பு ஆகியவற்றை வரலட்சுமி சரத்குமார் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். இரண்டாம் பாதியில் அவருக்கான முக்கியத்துவம் குறைந்து, மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்து வம் வந்துவிடுகிறது. இதை ஏற்றுக்கொண்டு நடித்திருப்பதற் காகவும் அவரைப் பாராட்டலாம். மற்றவர்களில் அர்ஜெய், மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக் ஆகியோர் தனித்து கவனம் ஈர்க்கின்றனர்.

சரண் ராகவனின் பின்னணி இசை படத்தின் த்ரில்லர் தன்மைக்கு வலுவூட்டுகிறது. அதிக பறவைக் கோணங்களைக் காட்டி எரிச்சல் தந்தாலும், வீட்டுக்குள் நடக்கும் குற்ற நிகழ்வுகளுக்குத் தேவையான ஒளியமைப்புடன் கூடிய ஒளிப்பதிவை தந்திருக்கிறார் பகத்குமார். மேலோட்டமாகப் பேசியிருந்தாலும் முக்கிய பிரச்சி னையை ஒரு க்ரைம் த்ரில்லர் கதைக்குள் பொருத்தி சமூக அக்கறையுடன் கூடிய தொய்வு இல்லாத த்ரில்லராக தந்த விதத் தில் கவர்கிறது இந்த நகரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x