Published : 03 Feb 2020 04:39 PM
Last Updated : 03 Feb 2020 04:39 PM

சூர்யாவுக்கு நாயகியாகும் ராஷ்மிகா மந்தனா?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சூரரைப் போற்று'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளனர். கோடை விடுமுறைக்கு 'சூரரைப் போற்று' வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹரி. இதனை 2டி நிறுவனமே தயாரிக்கவுள்ளது. முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவரும், படப்பிடிப்புத் தேதிகள் முடிவு செய்துவிட்டுச் சொல்லுங்கள் எனக் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

முன்னதாக, பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் 'சுல்தான்' படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சூர்யா - ஹரி படத்துக்கான ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழில் முதல் படமே தம்பியுடனும், அடுத்த படம் அண்ணனுடனும் ராஷ்மிகா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹரி படத்தை முடித்துவிட்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சூர்யா. தாணு தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x