Published : 01 Feb 2020 06:35 PM
Last Updated : 01 Feb 2020 06:35 PM

ஷனம் ஷெட்டி விஷயத்தில் நடந்தது என்ன? - தர்ஷன் நீண்ட விளக்கம்

ஷனம் ஷெட்டி தனக்கு எப்படிப் பழக்கமானார், அவருடன் எப்படி காதல் மலர்ந்தது உள்ளிட்ட விஷயங்களை தர்ஷன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் தர்ஷன் இருக்கும்போது, ஷனம் ஷெட்டியின் பதிவுகள் பெரும் வைரலாகும். ஏனென்றால், தான் எந்த அளவுக்கு தர்ஷனை விரும்புகிறேன் என்பது தொடங்கிப் பல விஷயங்கள் வீடியோவாகப் பேசி, பதிவேற்றுவார். பிக் பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியே வந்தவுடன் இருவருக்கும் மோதல் உண்டானது.

இதனிடையே நேற்று (ஜனவரி 31) காவல்துறையினரிடம் தர்ஷன் மீது புகார் அளித்துவிட்டு, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ஷனம் ஷெட்டி. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இன்று (பிப்ரவரி 1) காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் தர்ஷன்.

பத்திரிகையாளர் சந்திப்பில் தர்ஷன் பேசியதாவது:

''2016-ல் சென்னைக்கு வந்தேன். நான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, என்னுடைய இருசக்கர வாகனத்தை விற்று விட்டுதான் சென்னைக்கு வந்தேன். வந்ததும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் ஆறு மாத காலம் உதவியாளராகப் பணிபுரிந்தேன். அங்கங்கே நடக்கும் ஆடிஷனில் கலந்துகொண்டு விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். பிறகு வில்லனாக ஒரு படத்தில் நடித்தேன்.

2017-ம் ஆண்டில் தான் ஷனம் ஷெட்டியைச் சந்தித்தேன். அப்போது என்னை அவரது முகநூலில் சேர்த்தார். அதன் பிறகு என்னுடைய ஒவ்வொரு படத்தின் புகைப்படங்களைப் பார்த்து வாழ்த்துச் செய்தி அனுப்புவார். ஒருமுறை நான் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நாயகன் இன்னும் முடிவாகவில்லை. நீங்கள் நாயகனாக நடிக்க ஆடிஷன் வாருங்கள் என்று முகநூலில் செய்தி அனுப்பினார். நான் ஆடிஷனில் தேர்வான பிறகுதான் இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் நான்தான் என்று கூறினார்.

35 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அந்த சமயத்தில் அவருக்கு என் மீது ஒருதலைக் காதல் இருந்தது. 2018-ம் ஆண்டு முதல் நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். ஆனால் இருவரின் பணியில் இடையூறு வரும் என்பதால் வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தோம். இதற்கிடையே ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாங்கள் நடித்த படமும் பாதியில் நின்றுவிட்டது.

எனக்கும் விசா முடிவடைந்ததால் இலங்கைக்குத் திரும்பிவிட்டேன். சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு படப்பிடிப்பிற்காக இந்திய அழைத்தார்கள். வேலைவாய்ப்பு விசாவில் வந்தேன். இங்கு வந்த பிறகும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். அதுவரை எனது செலவுக்கு எனது அண்ணன்தான் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். அவ்வப்போது எனக்குக் கிடைக்கும் விளம்பர வாய்ப்பைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டினேன். ஷனம் ஷெட்டி அவ்வப்போது எனது பெயரை முன்னெடுத்து எனக்கு வாய்ப்புகள் வாங்கிக் கொடுப்பார். அவர் மிகப்பெரிய உதவிகளை வழங்கி இருக்கிறார் என்ற உணர்வு எனக்கு எப்போதும் இருக்கும்.

அதன் பிறகு, இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்க எங்களது சுய விவரங்களைக் கொடுத்து விண்ணப்பித்து இருந்தோம். என்னை விட ஷனம் ஷெட்டிக்கு வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம்தான் என்று நானும் இருந்தேன். அந்த சமயத்தில் விஜய் டிவியில் துணிக்கடை விளம்பரத்தில் நான் நடித்ததைப் பார்த்து என்னைத் தேடிக் கொண்டிருந்தார்கள். எனக்கு ரம்யாவும் சத்யாவும் நெருங்கிய நண்பர்கள். எங்களுடைய புகைப்படத்தைப் பார்த்துவிட்டு ரம்யாவிடம் இந்தப் பையனைத் தான் தேடிக்கொண்டிருந்தோம். போன் நம்பரைக் கொடுங்கள் என்று விசாரித்தனர்.

அதற்கு நாங்கள் தர்ஷனின் நிச்சயதார்த்த விழாவுக்கு வந்திருக்கிறோம். முடிந்ததும் அனுப்புகிறோம் என்று ரம்யா கூறினார். இந்த விவரங்களை நான் ஷனம் ஷெட்டியிடம் கூறியபோது, அவர் நமக்குள் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்று பத்திரிகைகளுக்குத் தகவல் அளித்து விடுங்கள். இல்லையென்றால் எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று என் மீது கோபப்பட்டார். அப்போது, சத்யாவும் ரம்யாவும் எங்களுடன்தான் இருந்தார்கள். அவர் கூறிய பிறகுதான் நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும்தான். எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை என்று நான் பேட்டி அளித்தேன்.

எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என் பெற்றோருக்குத் தெரியாது. ஏனென்றால் எனக்கு ஒரு தங்கை இருப்பதால் அவர் திருமணம் முடியும் வரை எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது தெரியாமல் இருக்க வேண்டும். அதற்குச் சம்மதித்தால் நான் நிச்சயம் செய்து கொள்கிறேன் என்று ஷனம் ஷெட்டியின் பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் சம்மதித்த பின்தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பிறகு, நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் செல்லும்போது ஷனம் ஷெட்டி, நீ யாரிடமும் இந்த விஷயத்தைக் கூற வேண்டாம். ஏனென்றால், வைல்ட் கார்ட் சுற்றில் நான் வர வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். அவருடைய மாமா அரசியலில் பெரும்புள்ளி. அவரை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆகையால் தான் ஆரம்பத்தில் நான் எதுவும் கூறவில்லை. மீரா பிரச்சினை ஆரம்பிக்கும்போதுதான் எங்கள் காதலைப் பற்றிக் கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் கூறினேன்.

பிறகு, அவர் நீச்சல் உடையில் பேட்டி அளித்திருந்தார். அது எனக்குப் பிடிக்காமல் ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டேன். அதற்கு ஷனம் ஷெட்டி உன்னை ஊக்குவிக்கத்தான் என்று கூறினார். மேலும, எனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர் பெயரும், கடவுச் சொற்களையும் கேட்டிருந்தார். நான் எனது அண்ணனும் தங்கையும் பார்த்துக்கொள்வார்கள். விஜய் டிவியில் வரும் விளம்பரமே போதும் என்று கூறிவிட்டேன். அதை மீறி என் அண்ணனிடம் கேட்டுள்ளார். அவர் மறுக்க என் தங்கையைக் கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு ஒரு மாதம் வரை என்னுடைய இன்ஸ்டாகிராம் முழுவதும் உபயோகப்படுத்தியது ஷனம் ஷெட்டி தான்.

''இனிமேல் பிக் பாஸில் கலந்துகொண்ட பெண்களிடம் நீ பேசுவது இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வது கூடாது. நீ எங்கு சென்றாலும் என்னையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும்'' என்று ஷனம் ஷெட்டி என்னை வற்புறுத்தினார். சமீபத்தில் மலேசியாவில் நடந்த நிகழ்ச்சிக்குக் கூட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம், ''நான் தர்ஷனின் காதலி. என்னையும் அழைத்துச் செல்லுங்கள்'' என்று கூறினார். அதற்கான செய்தி ஆதாரம் என்னிடம் உள்ளது.

அதேபோல் நான் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தன்னை கதாநாயகியாகப் போட வேண்டும் என்றும் ஷனம் கூறி வந்தார். அதற்கு நான் எனக்கு இந்தக் கதாநாயகிதான் வேண்டும் என்று கூறும் அளவுக்கு வளரவில்லை என்று கூறினேன். இதுபோல் அவ்வப்போது எங்களுக்குள் சிறு சிறு விவாதங்கள் நடந்து கொண்டே இருந்தன.

என்னிடம் கேட்டால் மட்டுமே நான் ஷனம் ஷெட்டியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யுங்கள் என்று கூறுவேன் என்றேன். அதன் பிறகு ஒரு நாள் அவர் என்னிடம், ''இப்போது உனக்குப் புகழ் கூடிவிட்டது. ஆகையால் இன்னும் இரண்டு மாதத்தில் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என்று அறிவித்துவிடு'' என்று கூறினார். அதற்கு, ''நாம் ஏற்கெனவே சமரசமாகப் பேசி முடிவெடுத்து விட்டோம். இப்போது நான் மூன்று படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். ஆகையால் இப்போது நான் கூற மாட்டேன்'' என்றேன். அதற்கு இன்னொரு தயாரிப்பாளர்களிடம் சென்று, ''இவரை வைத்துப் படம் எடுக்காதீர்கள்'' என்று கூறியுள்ளார். அப்போதுதான் நான் ஷனம் ஷெட்டியை விட்டு விலகுவது என்று முடிவெடுத்தேன். அதை அவரிடம் கூறியபோது நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். அந்தச் செய்தியின் ஆதாரமும் என்னிடம் இருக்கிறது.

அதோடு நில்லாமல், ''நான் உன் அம்மாவிடம் நம் காதலைப் பற்றிக் கூறப் போகிறேன்'' என்றார். என்னைச் சந்தித்து விட்டுதான் என் அம்மாவைச் சந்திக்கச் சென்றார். ''நீங்கள் இருவரும் காதலிப்பதால் எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், தர்ஷனின் தங்கைக்குத் திருமணம் செய்துவிட்டு உங்கள் திருமணத்தை நடத்துகிறோம்'' என்று என் அம்மா கூறினார். ஷனம் எனக்கு விசா சம்பந்தமாக சுமார் ரூ.3 லட்சம் அளித்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் அந்தப் பணத்தை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டேன். நிச்சயதார்த்த செலவு ரூ.2 1/2 லட்சம் தவிர வேறு எந்தப் பண உதவியையும் ஷனத்திடம் இருந்து நான் பெறவில்லை.

மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியது ஷனம் ஷெட்டிதான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்னுடன் பழகிய சில பெண்களிடம் அவர் நேரடியாகச் சென்று மிரட்டியுள்ளார். அவர்களுக்குப் பிரச்சினை வரும் என்ற காரணத்தால், அவர்கள் பெயரை வெளியே சொல்ல விரும்பவில்லை. அவர்களின் இன்ஸ்டாகிராம் அடையாளத்தைத் தடை செய்ததும் அவர்தான்.

மேலும் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்த சமயத்தில் ரம்யா- சத்யா திருமணத்தின்போது அவருடைய முன்னாள் காதலனுடன் தனியறையில் இருந்தார். அதற்கான ஆதாரம் மற்றும் இன்னும் அவரைப் பற்றிய பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்குப் பல பெண்களிடம் தொடர்பு இருக்கிறது என்று ஷனம் கூறியுள்ளார். அதற்கான ஆதாரம் இருந்தால் அவரைக் கொடுக்கச் சொல்லுங்கள். ஷனம் ஒரு நிகழ்ச்சியில் எங்களுக்கு இடையே ஷெரின்தான் தடையாக இருக்கிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். அது உண்மை அல்ல. நானும் ஷெரினும் நல்ல நண்பர்கள் மட்டும்தான்.

மேலும், நான் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஷனம் கூறியுள்ளார். அதுவும் உண்மையல்ல. இவ்வளவு நடந்த பிறகு அவரைத் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. எனக்கு அவர் நிறைய உதவிகள் செய்து இருப்பதால், அவர் மீது நான் எந்த வழக்கும் தொடர மாட்டேன். அவர் கொடுத்த வழக்கில் ஆணையர் கேட்டபின் என்னிடம் உள்ள ஆதாரங்களைச் சமர்ப்பிப்பேன்''.

இவ்வாறு தர்ஷன் பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x