Published : 10 Jan 2020 07:51 PM
Last Updated : 10 Jan 2020 07:51 PM

கர்ப்பம் தொடர்பான பத்திரிகையாளர் கேள்வி: அதிரடியாகப் பதிலளித்த தீபிகா படுகோன்

கர்ப்பம் தொடர்பாகக் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு அதிரடியாகப் பதிலளித்துள்ளார் தீபிகா படுகோன்.

ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகி, மீண்டு வந்து, வாழ்வில் வெற்றி கண்ட லக்‌ஷ்மி என்பவரின் உண்மைக் கதை, 'சப்பாக்' என்கிற பெயரில் திரைப்படமாக வெளியாகியுள்ளது. இதில் தீபிகா படுகோன் லக்‌ஷ்மி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேக்னா குல்சார் இயக்கியுள்ள இந்தப் படத்தை தீபிகா படுகோன் இணைந்து தயாரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் விமர்சன ரீதியாக அமோக ஆதரவைப் பெற்றுள்ளது. அதேவேளையில், தீபிகா படுகோன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இந்தி திரையுலகப் பிரபலங்கள் பலரும் தீபிகாவைப் பாராட்டினாலும், அரசியல் தலைவர்கள் அதனைப் பெரும் விவாதமாக உருவாக்கியுள்ளனர்.

இதனிடையே 'சப்பாக்' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தீபிகா படுகோன். அப்போது கர்ப்பம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தீபிகா அளித்துள்ள பதிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கர்ப்பம் தொடர்பான கேள்விக்கு தீபிகா பதில் அளிக்கையில், "நான் கர்ப்பமாக இருப்பது போலவா இருக்கிறேன். வாரிசு எப்போது வேண்டும் என்பதைத் திட்டமிடும்போது உங்களைக் கேட்கிறேன். அதற்கு நீங்கள் அனுமதியளிக்கும்போது, நான் திட்டமிட்டுக் கொள்கிறேன். நான் கர்ப்பமானால் அது 9 மாதங்களில் உங்களுக்குத் தெரியும்" என்று பதில் அளித்துள்ளார் தீபிகா படுகோன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x