Published : 08 Jan 2020 07:37 PM
Last Updated : 08 Jan 2020 07:37 PM

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இணை

தங்களைச் சுற்றி நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இணையான குமரன் மற்றும் வி.ஜே.சித்ரா ஜோடி.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இந்தத் தொடரில் குமரன் மற்றும் வி.ஜே.சித்ரா இருவரும் கணவன் - மனைவியாக நடித்து வருகிறார்கள்.

இதில் இருவரின் நடிப்பும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனிடையே சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் சண்டை ஏற்பட்டு, நட்பில் விரிசல் விழுந்துவிட்டது எனத் தகவல் வெளியானது. இதனால், இருவரின் காட்சிகளும் இனிமேல் எப்படி படமாக்குவார்கள் உள்ளிட்ட பல கேள்விகள் இணையத்தில் எழுந்து வந்தது.

இந்தச் செய்திகள் அனைத்துக்குமே தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் பதிலளித்துள்ளார் குமரன். அவருடன் அந்த வீடியோவில் வி.ஜே.சித்ராவும் இடம்பெற்றிருந்தார். இதில் இருவரும் வதந்திகள் குறித்து, "அனைவருக்கும் வணக்கம். நான் சந்தோஷமாக பாசிட்டிவாக இருங்கள், காலம் மாறும் என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். இப்போது காலம் மாறியுள்ளது. நீங்கள் நினைப்பது மாதிரியோ, பேசுவது மாதிரியோ பெரிய சண்டைகள் எல்லாம் கிடையாது. நண்பர்களுக்குள் சின்ன சின்ன விஷயங்கள் நடப்பது தான்.

சில நேரங்களில் சில மனிதர்களுக்குக் கோபம் வரும். அப்போது என்ன தோன்றுகிறதோ அதைச் செய்வோம். அது மனிதர்களுக்குள் இருக்கும் சகஜமான ஒரு விஷயம். ஆனால், நாங்கள் நண்பர்களாகவே இருக்கிறோம். இந்த வதந்திகள் உண்மையல்ல.

சில பேர் செய்திகளுக்கு அவர்களுக்குத் தெரிந்த வகையில் எதிர்வினையாற்றுவார்கள். எங்களைப் பற்றி கதை கட்டுபவர்களை நம்பாதீர்கள். நாங்கள் நண்பர்களாகவே இருக்கிறோம். இப்போது இன்னும் அந்த நட்பு வலுவடைந்துள்ளது. தொடர்ச்சியாக எங்களுக்கு ஆதரவு அளியுங்கள்” என்று பேசியுள்ளனர். இதன் மூலம் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் தொடர்பாக நிலவி வந்த சர்ச்சைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x