Published : 07 Jan 2020 03:30 PM
Last Updated : 07 Jan 2020 03:30 PM

ரொம்பப் பிடிச்ச ட்ரெய்லர்; பாராட்டிய விஜய்; உற்சாகத்தில் படக்குழு 

''நான் சமீபத்தில் ரொம்ப என்ஜாய் பண்ணி பார்த்த ட்ரெய்லர் 'நான் சிரித்தால்'. ரொம்பப் பிடிச்சது. என்னோட வாழ்த்தை படக்குழுவிடனரிடம் சொல்லுங்க'' என்று விஜய் லல்லுவிடம் கூறியுள்ளார். இதனால் படக்குழு உற்சாகத்தில் உள்ளது.

விஷால் நடித்த 'ஆம்பள' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. அதற்கு முன்னதாக பல்வேறு படங்களில் பாடல்களை மட்டுமே பாடி வந்தார். மேலும், தனியாக இசை ஆல்பங்களையும் உருவாக்கி வந்தார். 'ஆம்பள' படத்தைத் தொடர்ந்து 'இன்று நேற்று நாளை', 'தனி ஒருவன்', 'அரண்மனை 2', 'கதகளி' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைப்பாளராக ஆதி பணிபுரிந்தார். இதனைத் தொடர்ந்து 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் ஆதி நாயகனாகவும் அறிமுகமானார். வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து 'நட்பே துணை' படத்திலும் நாயகனாக நடித்தார்.

இவ்விரண்டு படங்களையுமே இயக்குநர் சுந்தர்.சியே தயாரித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்கும் 3-வது படத்தையும் சுந்தர்.சியே தயாரித்து வருகிறார். 'நான் சிரித்தால்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தைப் புதுமுக இயக்குநர் ராணா இயக்கியுள்ளார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் நடித்துள்ள லல்லு 'மாஸ்டர்' படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார். அவர் விஜய்க்கு 'நான் சிரித்தால்' பட ட்ரெய்லரைக் காட்டினார்.

''நான் சமீபத்தில் ரொம்ப என்ஜாய் பண்ணி பார்த்த ட்ரெய்லர் 'நான் சிரித்தால்'. ரொம்பப் பிடிச்சது. என்னோட வாழ்த்தை படக்குழுவிடனரிடம் சொல்லுங்க'' என்று விஜய் லல்லுவிடம் கூறியுள்ளார். இதனால் படக்குழு உற்சாகத்தில் உள்ளது.

'நான் சிரித்தால்' படத்தில் மெர்சலில் விஜய் நடித்த உணர்வுபூர்வமான காட்சியைப் பார்த்து ஆதி சிரிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இது ட்ரெய்லரிலும் வெளிவந்துள்ளது. சம்பந்தம் இல்லாத இடத்தில் சிரிக்கும் ஆதி, அதனால் ஏற்படும் ஆபத்துகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதையாக இருக்கும் எனத் தெரிகிறது.

கலாய்ப்பு ரீதியில் இருந்தாலும் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து விஜய் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x