Published : 31 Dec 2019 02:00 PM
Last Updated : 31 Dec 2019 02:00 PM
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.
ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான படம் ‘தர்பார்’. ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தில், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ப்ரதீக் பார்பர், நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த 16-ம் தேதி இதன் ட்ரெய்லர் வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட ‘தர்பார்’, தற்போது ஒரு வாரம் முன்கூட்டியே, அதாவது ஜனவரி 9-ம் தேதியே வெளியாகிறது. அதற்கு முன்னதாக, ஜனவரி 8-ம் தேதி அமெரிக்காவில் ப்ரீமியர் ஷோ திரையிடப்படுகிறது.
ஜனவரி 8-ம் தேதி ப்ரீமியர் ஷோ என்பதால், அதற்கு முன்னதாகவே வெளிநாடுகளுக்கு படத்தின் பிரதிகளை அனுப்பிவைக்க வேண்டும். அதனால், இந்த வருட இறுதிக்குள் விண்ணப்பித்தால்தான் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று முடிவெடுத்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு.
இந்நிலையில், படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், ‘தர்பார்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் வன்முறைக் காட்சிகள் இருப்பதால் யு/ஏ வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT