Published : 25 Dec 2019 04:56 PM
Last Updated : 25 Dec 2019 04:56 PM

இந்தியாவில் மிகச்சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே: இயக்குநர் பாரதிராஜா புகழாரம்

இந்தியாவில் மிகச்சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே என்று 'பச்சை விளக்கு' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜா புகழாரம் சூட்டினார்

டாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள படம் 'பச்சை விளக்கு'. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு தேவேந்திரன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா பாரதிராஜா திரைப்படக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் பாரதிராஜா பேசும் போது, "இன்று சாலை விதிகளைக் கடைப்பிடிக்காததால் தான் பல விபத்துகள் நடக்கிறது. சிக்னில் எனது காருக்கு முன்னால் 10 கார் நிற்கும். சிக்னல் போடுவதற்கு முன்னாலே போய்விடுகிறார்கள். அப்படி போனால் நாம் போய்விடுவோம் என்பது அவனுக்குத் தெரியவில்லை. இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு தங்களுடைய வாழ்க்கை மீதான அக்கறையே இல்லை. வாழ்க்கை ரொம்பவே அற்புதமானது. விபத்தால் ஒரு நிமிடத்தில் அது போய்விடும். நிதானமாகப் போனால் நீண்ட வருடங்கள் இருக்கலாம். வேகமாகச் செல்வதால் யாரும் உங்களைப் பாராட்டப் போவதில்லை. அதை ரொம்பவே அழகாகவே இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

முதன் முதலில் பாக்யராஜ் எனக்கு உதவியாளராக இருக்கும் போது, சொல்லிக் கொடுக்கும் பாணி வித்தியாசமாக இருக்கும். ஒரு நாள் கண்ணாடி அணியச் சொல்லி, நீ தான் ஹீரோ என்றேன். அதை நம்பவே இல்லை. அப்போது 'என்னய்யா, உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா' என்று கேட்டார் பஞ்சு அருணாச்சலம். எனக்குத் தெரிந்து என் கண்ணுக்கு வாத்தியாராகவே தெரிகிறான் என்றேன்.

அதை மீறி ரதி என்ற நாயகியுடன் பாக்யராஜை நடிக்க வைத்தேன். 'பாக்கியம்.. உனக்கு இங்கிலீஷ் சரியா வராது. கொஞ்சம் சரியா பேசிடு' என்று பாக்யராஜிடம் சொன்னேன். ஏனென்றால் அவள் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருப்பாள். இந்த வளர்ச்சிக்கு நான் என்று சொல்ல முடியாது, கடவுள் அவனுக்குக் கொடுத்த பரிசு. அதற்குப் பிறகு அவன் வளர்ந்தது வேறு. நான் விதைப் போட்டேன். ஆனால், அந்த விதைப் போடுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்.

நடிகன் என்பவன் ஜெமினி கணேசன் மாதிரி அழகாக இருக்க வேண்டுமா எனக் கேட்பேன். அந்தக் காலத்தில் அழகு ஒன்று தான் சினிமாவா என்று சண்டைப் போடுவேன். இந்தப் படத்தில் துணிச்சலாக நடித்துள்ள மாறனுக்கு வாழ்த்துகள்.

இதுவரை 9 இசையமைப்பாளர்களுடன் இசைபுரிந்துள்ளேன். ஆர்.டி.பர்மன், இளையராஜா, வித்யாசாகர் தொடங்கி அனைவருடன் பணிபுரிந்துவிட்டேன். இளையராஜாவுடன் சண்டை வரும் போதெல்லாம், போய் 4 பேருடன் பணிபுரிந்துவிட்டு மறுபடியும் வருவேன். இன்றைக்கும் வரை எனக்கும் இளையராஜாவுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம்.

என் வாழ்க்கையில் இந்தியாவில் மிகச்சிறந்த இசையமைப்பாளர் யார் என்றால் இளையராஜா மட்டும் தான். அவனுடைய இசையைத் தான் விமர்சிக்க முடியும். அவனை விமர்சிக்க முடியாது. இளையராஜாவுக்குப் பிறகு நான் ரொம்பவே ரசித்தது தேவேந்திரனைத் தான். 'வேதம் புதிது' படத்தில் அப்படிப் பண்ணியிருப்பான். எங்கு இடறினான் என்று தெரியவில்லை" என்று பேசினார் பாரதிராஜா

இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது, "இன்றைக்கு சினிமா இருக்கும் நிலையில் நல்ல கருத்து கடினமான விஷயம். ஏனென்றால் கருத்துச் சொன்னால் மக்கள் வரவேண்டுமே. அந்த மாதிரி சூழலில் டாக்டர். மாறன் இந்த 'பச்சை விளக்கு' படத்தை எடுத்துள்ளார். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்" என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x