Published : 09 Dec 2019 05:12 PM
Last Updated : 09 Dec 2019 05:12 PM
எனது திரை வாழ்க்கையில் இது ஒரு மாயாஜால மைல்கல் என்று ரஜினியுடன் நடிக்கவுள்ளது குறித்து கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் 2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டைப் பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளது படக்குழு.
'தர்பார்' படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இமான் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தில் வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும் பணிபுரியவுள்ளனர்.
தற்போது இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்கவுள்ளவர்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளது படக்குழு. முதலில் சூரி நடிக்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
முதன்முறையாக ரஜினி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த மகிழ்ச்சியைத் தனது ட்விட்டர் பதிவில், "எனது திரை வாழ்க்கையில் இந்த ஒரு மாயாஜால மைல்கல் பற்றி அறிவிப்பதில் அளவற்ற மகிழ்ச்சி. ரஜினிகாந்தைத் திரையில் வாயைப் பிளந்து பார்த்ததிலிருந்து, இன்று அவருடன் சேர்ந்து நடிக்கும்வரை, இவையே என் வாழ்நாளில் நான் பொக்கிஷமாக நினைக்கும் நினைவாக இருக்கும். நன்றி இயக்குநர் சிவா சார் மற்றும் சன் பிக்சர்ஸ்" என்று வெளிப்படுத்தியுள்ளார்.
கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா ரஜினியுடன் 'நெற்றிக்கண்' என்னும் படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT