Published : 06 Dec 2019 03:05 PM
Last Updated : 06 Dec 2019 03:05 PM
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ' படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து, டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து 'கோலமாவு கோகிலா' இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். 'டாக்டர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளார். இவர் தெலுங்கில் வெளியான 'கேங் லீடர்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், யோகி பாபு, இளவரசு, 'கோலமாவு கோகிலா' டோனி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
இன்று (டிசம்பர் 6) பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளராக விஜய் கார்த்திக், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். 'டாக்டர்' படத்தை முடித்துவிட்டு, விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT