Published : 28 Nov 2019 10:45 AM
Last Updated : 28 Nov 2019 10:45 AM
விஜய்க்காக கதை எழுதுவது தவறு. அவர் என் கதைக்குள் வர வேண்டும் என்று இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்தப் படத்தின் மீதிருந்த பைனான்ஸ் சிக்கல் அனைத்துமே முடிவுக்கு வந்து, நாளை (நவம்பர் 29) வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை விளம்பரப்படுத்த கெளதம் மேனன் பேட்டிகள் அளித்து வருகிறார். அவ்வாறு அளித்த பேட்டியொன்றில் 'விஜய் சார் நடிப்பது மாதிரி இன்னும் கதை அமையவில்லையா" என்ற கேள்விக்கு கெளதம் மேனன் பதிலளித்துள்ளார்.
அதற்கு கெளதம் மேனன், "விஜய்க்கான கதை இன்னும் எழுத வரவில்லை. எனக்கும் ரொம்ப ஆசை தான். எனக்கும் ஒரு பெரிய பட்ஜெட் படம் பண்ண ஆசையுள்ளது. நான் பெரிதாக செலவு வைக்கமாட்டேன் என்று தெரியும். விஜய் சார் நடிக்கும் படங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம் சொல்கிறேன். என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அதற்குள் அந்த ஹீரோ வந்து நடித்தால்தான் நன்றாக இருக்கும். அந்த ஹீரோவுக்கு என்ன சரியாக இருக்கும் என்று எழுதத் தொடங்கினால் வராது. பாடல்கள், ஆக்ஷன், பஞ்ச் வசனங்கள் இருக்க வேண்டும் என நினைத்து எழுதினால் அது சரியாக வருமா என்று தெரியவில்லை.
என் கதைக்குள் அவர் வந்தால், அழகாக, மாஸாக, பாடல்கள், ஆக்ஷன் எனப் பண்ணலாம். விஜய் சாருக்காக என யோசிக்க ஆரம்பித்தால் அது தவறு என்றுதான் தோன்றுகிறது. எனக்கு அவருடன் பணிபுரிய விருப்பம்தான். அவருக்குமே அது தெரியும்.
அவர் ரூ.80-100 கோடிகளில் ஒரு படம் பண்ணுகிறார் என்றால், அதை ரூ.30 கோடியில் பண்ண எனக்குத் தெரியும். அந்தக் கதையும் எனக்கு அமைய வேண்டும். அதை அவரிடம் சொல்வதற்கும் எனக்குத் தைரியம் வர வேண்டும். அவரும் இவன் பண்ணுவான் என்ற நம்பிக்கையில் வந்தார் என்றால், அன்றைக்குத் தீபாவளிதான்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.
கெளதம் மேனன் அளித்துள்ள இந்தப் பதில் தற்போது ட்விட்டர் தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT