Published : 27 Nov 2019 12:50 PM
Last Updated : 27 Nov 2019 12:50 PM
'வலிமை' படத்தில் அஜித்துடன் அரவிந்த்சாமி நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு திரையுலகினர் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் கதையைக் கூறுகிறார்கள்.
'நேர்கொண்ட பார்வை' படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஹெச்.வினோத் இயக்கவுள்ள இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு, நடிகர்கள் தேர்வு என அனைத்தையுமே முடித்துவிட்டாலும், படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் உள்ளது.
இதனிடையே இந்தப் படத்தில் அஜித்துடன் அரவிந்த்சாமி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அஜித் - அரவிந்த்சாமி புதிய கூட்டணி என்பதால் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கினார்கள். இது தொடர்பாக விசாரித்த போது திரையுலகைச் சேர்ந்த ஒருவர் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் தெரிவித்தார்.
என்னவென்றால், 'நேர்கொண்ட பார்வை' படத்தின் ரங்கராஜ் பாண்டே கதாபாத்திரத்துக்காக முதலில் பல்வேறு நடிகர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. அதில் முதலில் இருந்த பெயர்தான் அரவிந்த்சாமி. பின்பு அந்தப் பட்டியலில் ரங்கராஜ் பாண்டே புதிதாக இணைந்தார். யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கும் என்று நினைத்து பாண்டேவைத் தேர்வு செய்து நடிக்க வைத்தனர்.
அந்தச் செய்தியை வைத்தே இப்போது இப்படியொரு செய்தி வெளியாகி இருக்கலாம் என்று 'வலிமை' படக்குழு கருதுகிறது. மேலும், தற்போது அஜித் நடிக்கும் படத்தின் படக்குழுவினர் யாரேனும் வேறொரு நடிகரைச் சந்தித்தால் உடனே, அஜித்துடன் அவர் நடிக்கிறார் என்று செய்தியை வெளியிட்டு விடுகிறார்கள் எனச் சிரிக்கிறார்கள்.
இவரது பதிலை வைத்துப் பார்த்தால் அஜித் - அரவிந்த்சாமி இணைந்து நடிக்கும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT