Published : 08 Oct 2019 05:43 PM
Last Updated : 08 Oct 2019 05:43 PM

அஜித் குறித்த ட்வீட் பகிர்வால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள்: பாடலாசிரியர் விவேக் விளக்கம்

அஜித் குறித்து ஷாரூக் கான் வெளியிட்ட ட்வீட்டைப் பகிர்ந்தமையால் விஜய் ரசிகர்கள் கோபமடைந்தனர். இதற்கு பாடலாசிரியர் விவேக் விளக்கம் அளித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது, #AskSRK என்ற ஹேஷ்டேகில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார் ஷாரூக் கான். அதன்படி, இன்று (அக்டோபர் 8) காலையில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினர். அதில் தமிழ்த் திரையுலக ரசிகர்களும் கலந்துகொண்டு விஜய், அஜித், தனுஷ் ஆகியோர் பற்றி கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு ஷாரூக் கான் விஜய் அற்புதம், அஜித் எனது நண்பர், தனுஷ் நான் நேசிக்கும் நபர் என்று பதிலளித்தார். ஷாரூக் கானின் இந்த மூன்று ட்வீட்டையுமே பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தளபதி, தல மற்றும் தனுஷ் சார் என்று குறிப்பிட்டார்.

விஜய்க்கு மிக நெருக்கமான நண்பராக வலம் வருபவர் பாடலாசிரியர் விவேக். 'பிகில்', 'மெர்சல்' உள்ளிட்ட படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். விஜய்க்கு நெருக்கமானவர் அஜித் குறித்த ட்வீட்டைப் பகிர்ந்ததால், விஜய் ரசிகர்கள் கோபமடைந்தனர்.

விஜய் ரசிகர் ஒருவர், "என்ன அனைத்துக்கும் ஜால்ரா போடுகிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பாடலாசிரியர் விவேக், "உங்களுக்கும், உங்களை மாதிரி நினைப்பவர்களுக்கும் நான் ஒன்றும் பண்ண முடியாது. கடந்த 10 நாட்களில் 15 முதல் 17 பாடல்கள் எழுதியுள்ளேன். நான் பாடல்கள் எழுதாவிட்டாலும், வேறு எங்காவது பணிபுரிந்து கொண்டிருப்பேன்.

ஜால்ரா போட வேண்டிய அவசியமில்லை தலைவா. ஒரு பெரிய கலைஞன், நம்ம ஊர் நடிகர்களைப் பற்றி பேசும்போது பெருமையாக இருக்கிறது. ஷேர் பண்ணினேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், 'தல 60' படத்துக்கு நான் பாடலாசிரியர் இல்லை. யதார்த்தமாகப் பகிர்ந்தேன் என்று விவேக் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பலரும் விவேக்கை விமர்சிக்கத் தொடங்கினர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாடலாசிரியர் விவேக், " இருதரப்பு ரசிகர்களுக்கும் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் அடித்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் இங்கு ஜாஸ்தி.

ஆனால், நீங்கள் சண்டைபோடக் கூடாது எனத் தளபதியும் தலயும் நினைக்கிறார்கள். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிற 10 பேரையும் காயப்படுத்தாதீர்கள். நீங்கள் என்னைக் காயப்படுத்த முடியாது. ஏனென்றால் என் இதயம் வலுவானது" என்று தெரிவித்துள்ளார் விவேக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x