Published : 05 Sep 2019 10:05 AM
Last Updated : 05 Sep 2019 10:05 AM

இந்த மேடையிலிருந்து புதிய கேம் ஆரம்பம்: சிவகார்த்திகேயன்

'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தை எனது முதல் படமாக நினைத்து நடித்துள்ளேன். இந்த மேடையிலிருந்து என் புதிய கேம் ஆரம்பமாகிறது என்று சிவகார்த்திகேயன் பேசினார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், சூரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் செப்.8-ம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது. இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசும் போது, " 'மெரினா' படத்தின் மூலமாக என்னை ஹீரோவாக்கியவர் இயக்குநர் பாண்டிராஜ் சார். பிறகு 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்திலும் நடிக்க வைத்தார். 3-வது முறையாக இணையும் போது அது பெரிய பேனராக தான் இருக்க வேண்டும் என நினைத்தோம். அதே போல் சன் பிக்சர்ஸ் படம் அமைந்துள்ளது.

சினிமா ஜாம்பவான் பாரதிராஜா சாருடன் இணைந்து நடித்தது பெரிய விஷயம். ஐஸ்வர்யா ராஜேஷ் எனக்குத் தங்கையாக நடித்திருப்பது குறித்து பலரும் ஏன் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். படம் பார்த்த பிறகு யாரும் அது போல் கேட்க மாட்டார்கள். சிவகார்த்திகேயனாக ஆக வேண்டும் என்ற கனவுடன் இளைஞர்கள் திரைத்துறைக்கு வர விரும்புவதாகக் கூறுகிறார்கள்.

சிவகார்த்திகேயனை விடப் பெரிய ஆளாக கூட திரைத்துறையில் வர முடியும். தற்போது சிவகார்த்திகேயனாக இருப்பது மிகவும் சந்தோஷம். அதே சமயத்தில் நிறைய கஷ்டமும் கூட. உன்னால் முடியாது, வராது என்ற இரண்டு வார்த்தைகளைக் கேட்டுத்தான் சின்ன வயதிலிருந்தே வளர்ந்திருக்கிறேன்.

ஒவ்வொன்றாக ஏன் முடியாது, வராது என்று கேட்டு கேட்டு வளர்ந்தேன். சினிமாவுக்கு வந்தவுடன் இவருக்கு காமெடி மட்டும் தான் வரும் என்றார்கள். அதையும் மீறி நடித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு படம் தோல்வியடைந்தால் என்னைத் தாங்கிக் கொள்ள ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆகையால் முடியாது, வராது என்று பேசுவதை சவாலாக எடுத்துக் கொண்டால் தான் தாண்ட முடியும். 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தை எனது முதல் படமாக நினைத்து நடித்துள்ளேன். இந்த மேடையிலிருந்து என் புதிய கேம் ஆரம்பமாகிறது” என்று பேசினார் சிவகார்த்திகேயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x