Published : 21 Aug 2019 11:12 AM
Last Updated : 21 Aug 2019 11:12 AM
ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜோதிகா நடிப்பில் வெளியான 'காற்றின் மொழி' படத்தைக் கடைசியாக இயக்கினார் ராதா மோகன். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்தக் கதையை சில நாயகர்களிடம் தெரிவித்தார். ஆனால், அதில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா சம்மதம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் இறுதியில் படப்பிடிப்புக்குச் செல்ல ஆயத்தமாகி வருகிறது படக்குழு. இதை யார் தயாரிக்கவுள்ளார், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல் உள்ளிட்ட அனைத்தையுமே ரகசியமாக வைத்துள்ளது படக்குழு.
'மான்ஸ்டர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படம் இதுவாகும். மேலும், அவரது நடிப்பில் உருவான 'இறவாக்காலம்' மற்றும் 'நெஞ்சம் மறப்பதில்லை' உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுச் சிக்கலில் இருக்கின்றன. அமிதாப்பச்சனுடன் நடித்து வந்த 'உயர்ந்த மனிதன்' படமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT