Published : 15 Aug 2019 12:31 PM
Last Updated : 15 Aug 2019 12:31 PM

''நீ அரசியலுக்கு வந்ததும் கச்சேரி வைச்சிக்கிறேன்னு பாரதிராஜா சொன்னாரு’’ - ரஜினி பேச்சு

வி.ராம்ஜி


‘’நீ அரசியலுக்கு வந்ததும் கச்சேரி வைச்சிக்கிறேன்னு பாரதிராஜா சொன்னாரு’’ என்று ரஜினிகாந்த் பேசினார்.


கதாசிரியரும் தயாரிப்பாளருமான கலைஞானத்துக்கு இயக்குநர் பாரதிராஜா மற்றும் திரைக்கலைஞர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று 14ம் தேதி நடந்த விழாவில் கலந்துகொண்டு ரஜினிகாந்த் பேசியதாவது:
போன மாதம் 8ம் தேதி கலைஞானம் சார் எனக்கு போன் செய்தார். அடுத்த மாதம் 14ம் தேதி எனக்குப் பிறந்தநாள். முக்கியமான பிறந்தநாள். 90வது பிறந்தநாள் என்று சொன்னார். வாழ்த்தினேன்.

’அடுத்த மாதம், அதற்காக பாரதிராஜா ஒரு விழா எடுக்கிறார். நீங்கள் அவசியம் வரவேண்டும். நீங்கள் வந்து கலந்துகொண்டால்தான் விழா பூர்த்தி அடையும்’ என்று கலைஞானம் சொன்னார். ஆனால் அப்போது எனக்கு ‘தர்பார்’ ஷூட்டிங் இருக்கேன்னு சொன்னேன். பாரதிராஜா பேசுவார் உங்ககிட்ட’ன்னு சொன்னார் கலைஞானம்.

அப்புறமா, பாரதிராஜா பேசினார். ‘என்ன தலைவா... எப்படி இருக்கீங்க?’ன்னு கேட்டார். நானும் அவரும் தனியா இருக்கும் போது, பாரதிராஜா என்னை தலைவான்னுதான் கூப்பிடுவார். ஆனா, என்னுடைய ரசிகர்கள் தலைவான்னு கூப்பிடுவதற்கும் இதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு.

அதேபோல், என்னுடைய படத்தை ஊரே கொண்டாடிக்கொண்டிருக்கும். படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், பாரதிராஜா, ‘அதென்னய்யா... பாட்டி வடை சுட்ட கதைல நீ நடிச்சாக்கூட ஓடிரும் போல’ என்று கிண்டல் செய்வார். அப்புறம், ‘உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குய்யா’ என்று சொல்லுவார்.

அதேசமயம், ’மதுரையில் எம்ஜிஆருக்கு விழா எடுத்திருக்கேன். சிவாஜிக்கு விழா எடுத்திருக்கேன். உனக்கும் ஒரு விழா எடுத்துடுறேன். அதுக்குப் பிறகு நீ அரசியலுக்கு வா. அப்புறமா கச்சேரியை வைச்சிக்கிறேன்’ என்று அடிக்கடி சொல்வார் பாரதிராஜா.

கருத்து வேற்றுமைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கலாம். அதில் தவறில்லை. எங்களுக்குள் ஆழமான நட்பு உண்டு. எந்தக் காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் நட்பு முறியாது. எதுவும் நட்புக்கு இடையூறாக இருக்காது. வாழ்க்கையில் மீண்டும் சம்பாதிக்கவே முடியாத விஷயம் பழைய நண்பர்கள்தான்.

ஆகவே, பழைய நண்பர்கள் என்ன சொன்னாலும் அனுசரித்துக்கொண்டு, பொறுத்துக்கொண்டு போய்விடவேண்டும். இல்லையெனில், பழைய நட்பை இழக்க நேரிடும். இந்த வயதான காலத்தில், பழைய நண்பர்களை இழந்துவிட்டு எப்படி நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழமுடியும். எனக்கும் பாரதிராஜாவுக்குமான நட்பு, அப்படிப்பட்டது. எப்போதும் முறியாமல் இருக்கும்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x