Published : 13 Aug 2019 01:16 PM
Last Updated : 13 Aug 2019 01:16 PM
முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு வலுத்தது. ஆனால், அதில் நடிப்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி படமொன்று உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தர்மோசர் பிக்சர்ஸ் மற்றும் ராணா இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
இதில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட சிலர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இலங்கையில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போது முத்தையா முரளிதரன் அமைதி காத்தார் என்று கூறினர்.
இதனைத் தொடர்ந்து முத்தையா முரளிதரன் பயோபிக்கில் இருந்து விஜய் சேதுபதி விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இது தொடர்பான எந்தவொரு தகவலுமே வெளியாகாமல் இருந்தது. தற்போது, முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார் விஜய் சேதுபதி.
ஆஸ்திரேலியா ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி, “முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையைக் கேட்டேன். அது உண்மையிலேயே ரொம்ப நல்ல கதை. அது ரொம்ப எனர்ஜியான கதையும் கூட. அனைத்து விஷயங்களையும் தாண்டி மனிதாபிமானம் ரொம்பவே முக்கியம். இதில் ஒற்றுமை பற்றிய சில காட்சிகள் உள்ளன. என்னைப் பற்றி ஒரு விஷயம் வெளியே வரும் போது, அதை நான் எப்படிப் பார்க்கிறேன் என்ற ஒரு பார்வை இருக்கும். அதே விஷயத்தை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று ஒன்று இருக்கும். இதில் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.
நான் கேட்ட கதை, முத்தையா முரளிதரனிடம் பழகிய விதம் ஆகியவற்றை வைத்து எனக்கொரு பார்வை இருக்கிறது. இந்தக் கேள்விகள் எல்லாம் படம் வந்தவுடன் காணாமல் போய்விடும் என நினைக்கிறேன். கிரிக்கெட் ப்ளேயர் என்பதைத் தாண்டி அவருடைய பெர்சனல் வாழ்க்கையைத் தான் அந்தப் படம் அதிகமாகப் பேசுகிறது. ஒரு நல்ல படமாக இருக்கும் என நினைக்கிறேன். அந்தப் படம் வரும்போது, இப்போது உள்ள கேள்விகள் அனைத்துக்குமே பதில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT