Published : 06 Jul 2015 01:03 PM
Last Updated : 06 Jul 2015 01:03 PM
'ஓ காதல் கண்மணி' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
துல்ஹர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் 'ஓ காதல் கண்மணி'. மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தின் நாயகன் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானவண்ணம் இருந்தன. முதலில் மணிரத்னம், தனுஷ் நடிக்கவிருக்கும் இந்தி படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்போது மணிரத்னம் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது குறித்து விசாரித்த போது, "ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு மணிரத்னம் - கார்த்தி இருவரும் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதர தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்கள்.
'ஆயுத எழுத்து' படத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT