Published : 17 Apr 2015 08:04 PM
Last Updated : 17 Apr 2015 08:04 PM
விண்வெளியில் உள்ள மிகச்சிறிய கிரகமான புதன் கிரகத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட 'மெஸெஞ்சர்' விண்கலம் இன்னும் இரண்டு வாரங்களில் செயலிழக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள கிரகமாக புதன் கிரகம் உள்ளது. இந்த கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள கடந்த 2004ம் ஆண்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 'மெஸெஞ்சர்' எனும் விண்கலத்தை அனுப்பியது.
கடந்த 2011ம் ஆண்டு புதன் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட அந்த விண்கலம், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அந்த கிரகத்தின் உள்ளே சென்று செயலிழந்து போகும் என்று கூறப்படுகிறது.
புதன் கிரகத்தில் அந்த விண்கலம் நுழையும்போது, அது பூமியில் இருந்து வேறு திசையில் இருக்கும். ஒரு விநாடிக்கு சுமார் 3.91 கிலோமீட்டர் வேகத்தில் அந்த கிரகத்துக்குள் விண்கலம் நுழைய இருப்பதால், அது மிகச்சரியாக எத்தனை மணிக்கு கிரகத்துக்குள் சென்றது என்ற தகவலை விஞ்ஞானிகள் பெற முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இது அனேகமாக வருகிற 30ம் தேதி நிகழலாம் என்று நாசா கூறியுள்ளது. மிக வெற்றிகரமான விண்கலமாக கூறப்படும் இந்த 'மெஸெஞ்சர்' விண்கலத்தின் அடிப்படைப் பணி புதன் கிரகத்தை சுற்றி வந்து அது குறித்த தகவல்களைத் தருவதுதான். இவ்வாறு அது தந்த தகவல்களில் மிக முக்கியமானது, அந்த கிரகத்தில் மிக அதிக அளவு நீர் உறைந்த நிலையில் உள்ளது என்பதாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT