Published : 31 Mar 2015 04:39 PM
Last Updated : 31 Mar 2015 04:39 PM

தவறுதலாக 6 ஆண்டுகளாக சிறை: ஹெச்ஐவி பாதித்தவருக்கு ரூ.1.50 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

தவறுதலாகக் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகள் 9 மாதமாக மதுரை சிறையில் அடைக்கப்பட்ட ஹெச்ஐவி பாதித்த இளைஞருக்கு, தமிழக அரசு ரூ.1.50 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கம்பம் அய்யன் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த உதயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை 2001-ல் ஒரு குற்ற வழக்கில் கருப்பையா மகன் முருகன் என்பவருக்கு பதிலாக, கானாவிலக்கு போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் உதயாவுக்கு பெரியகுளம் நீதிமன்றம் 9 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது.

பின்னர், இந்த வழக்கில் உதயா தவறுதலாக கைது செய்யப்பட்டதாகக் கூறி, அவரை விடுதலை செய்ய திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உதயாவை கைது செய்த ஆய்வாளர் மாதவன், சார்பு ஆய்வாளர் முருகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யவும், இழப்பீடு கேட்டு உதயா உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உதயா இழப்பீடு கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், தான் ஹெச்ஐவி பாதித்தவர் என்றும், சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும், இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஆய்வாளர் மாதவன், சார்பு ஆய்வாளர் முருகன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி எம். சத்தியநாராயணன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. உதயா சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். விசாரணைக்கு பின் நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு:

உதயா தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உதயாவுக்கு உள்துறை செயலர் இடைக்கால நிவாரணமாக ரூ.1.50 லட்சத்தை 4 வாரத்தில் வழங்க வேண்டும்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஆய்வாளர் முருகனை ஓய்வுபெற அனுமதித்தது ஆச்சரியமாக உள்ளது. அவருக்கு எதிராக பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என அதிருப்தி தெரிவித்த நீதிபதி விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x