Published : 25 Feb 2015 12:47 PM
Last Updated : 25 Feb 2015 12:47 PM

தனுஷ் - சிவகார்த்திகேயன் நட்பில் முதிர்ச்சியே... விரிசல் அல்ல: நண்பன் அனிருத்

தனுஷ் - சிவகார்த்திகேயனுக்கு இடையே நட்பில் முதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது என்று இருவருக்கும் நெருங்கிய நண்பராக உள்ள அனிருத் தெரிவித்தார்.

'காக்கி சட்டை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வராதது மற்றும் ஒரு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனைப் பார்த்தவுடன் வெளியேறியது உள்ளிட்ட விஷயங்களில் தனுஷ் - சிவகார்த்திகேயன் இருவருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகின.

தனுஷ், சிவகார்த்திகேயன் இருவருக்குமே நெருக்கமான நண்பராக வலம் வருபவர் இசையமைப்பாளர் அனிருத். இருவருக்கும் இடையே ஏதும் பிரச்சினையா என்று அனிருத்திடம் கேட்டதற்கு என்னிடம் அவர் பகிர்ந்தது:

"தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து நான் இசையமைத்த 'காக்கி சட்டை' படம் வெளியாக இருக்கிறது. அப்புறம் எப்படி சண்டை இருக்கும்? இந்த மாதிரியான செய்திகள் எல்லாம் வரும் என்று முதலிலேயே எங்களுக்குத் தெரியும்.

'எதிர் நீச்சல்' நேரத்திலேயே இப்படியான வதந்திகள் வரும் என்று நினைத்தோம். சிவகார்த்திகேயனுக்கு 2 படங்கள் வெளியானதற்கு பிறகு இந்தப் பிரச்சினை தொடங்கி இருக்கிறது. உண்மையாகவே அப்படி ஒரு பிரச்சினையே கிடையாது. ஒருவருடைய வளர்ச்சி இன்னொருத்தருக்கு சந்தோஷத்தைதான் கொடுத்திருக்கிறது.

தனுஷ் சார் வராமல் இருந்தது, ஏற்கெனவே பேசி வைத்து நடந்ததுதான். இப்போது சிவகார்த்திகேயனும் ஒரு முக்கிய ஸ்டார். அவருக்கு யாருடைய உறுதுணையும் இப்போது தேவையில்லை. 'எதிர் நீச்சல்' பத்திரிக்கையாளர் சந்திப்பில் வந்து உட்கார்ந்து தனுஷ் பேசினார் என்றால், அது வேற விஷயம். இன்றைய தேதிக்கு சிவகார்த்திகேயனுக்கு அப்படி இன்னோர் ஸ்டாரின் புரொமோஷன் தேவையில்லை.

தனுஷ் சார் இப்போது வந்து பேசினார் என்றால், அது சிவாவின் வளர்ச்சியைதான் குறைவாக்கும். சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்காக தோள் கொடுத்தவர், இப்போது வளர்ந்த பிறகு சற்றே தள்ளி நின்று மகிழ்கிறார். தனுஷின் இந்த அணுகுமுறை உண்மையில் சிவாவுக்கு நெகிழ்வான ஒன்றுதான். இருவரது நட்பிலும் தெளிவாகத் தெரிவது முதிர்ச்சிதானே தவிர விரிசல் அல்ல" என்றார் அனிருத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x