Published : 31 Dec 2014 01:24 PM
Last Updated : 31 Dec 2014 01:24 PM

மேல்மருவத்தூரில் சாலை விபத்து தாய், மகன் உட்பட 4 பேர் பலி

மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்த பக்தர்கள் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது அவர்கள் மீது அடையாளம் தெரியாத தனியார் வாகனம் மோதியது. இந்த விபத்தில் தாய், மகன் உட்பட 4 பேர் பலியானார்கள். பெண் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் அடுத்த மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 26 பேர், மாலை அணிந்து இருமுடியுடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வேனில் சென்றனர். கோயிலுக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனத்தை நிறுத்தினர். அவர்களில் 9 பேர், குளிப்பதற்காக கோயில் வளாகத்தில் உள்ள குளியலறையை நோக்கி நேற்று அதிகாலை நடந்து சென்றனர்.

அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத தனியார் வாகனம் ஒன்று, அவர்கள் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றது. இதில், பத்மாவதி (34), அவரது மகன் திவாகரன் (12) மற்றும் முனியம்மாள் (35), ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மேல்மருவத்தூர் போலீஸார், படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அமுதா (36) என்பவர் இறந்தார். மேலும், ஒரு பெண் உட்பட 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, மேல்மருவத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆதிபராசக்தி கோயிலின் இருமுடி திருவிழாவில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என தெரிந்தும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொள்ளாததே விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x