Last Updated : 03 Jul, 2019 07:57 PM

 

Published : 03 Jul 2019 07:57 PM
Last Updated : 03 Jul 2019 07:57 PM

ஓவியா சூப்பர் ஸ்டாராகிவிட்டார்: சரண்யா பொன்வண்ணன் புகழாரம்

ஓவியா சூப்பர் ஸ்டாராகிவிட்டார் என்று 'களவாணி 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்  சரண்யா பொன்வண்ணன் புகழாரம் சூட்டினார்.

சற்குணம் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘களவாணி’. அதன் 2-ம் பாகத்தை மீண்டும் சற்குணமே இயக்கி தயாரித்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா, இளவரசு, சரண்யா பொன்வண்ணன், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜுலை 5-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விமல் தவிர்த்து மற்ற அனைவருமே கலந்து கொண்டனர். இவ்விழாவில் சரண்யா பொன்வண்ணன் பேசும் போது, "'களவாணி' எனக்கு வாழ்நாள் சாதனை படம் எனச் சொல்வேன். அப்படியொரு படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம். எந்தவொரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் 'களவாணி' வசனத்தைப் பேசுங்கள் என்று கேட்பார்கள். அந்த வாய்ப்பு கிடைத்ததிற்கு நான் அதிர்ஷ்டம் பண்ணியிருக்கேன். இயக்குநர் சற்குணத்துக்கு நன்றி.

'களவாணி 2' என்றவுடன் நானே இப்படித்தான் இருக்கும் என யூகித்தேன். ரொம்ப அற்புதமான கதைக்களத்தை கொண்டு வந்தார் இயக்குநர் சற்குணம். 'களவாணி' படத்தின் போது, இந்த வசனத்தை எப்படி பேசலாம் என்று யூகிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது. ஆனால் 'களவாணி 2'வில் எனக்கு சிரிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது. ஒரு வசனம் கூட பேச முடியாமல் சிரித்துக் கொண்டே இருந்தேன். அந்தளவுக்கு காமெடி இந்தப் படத்தில் இருக்கிறது.

'களவாணி 2'வுக்குப் பிறகு கூட 'களவாணி 3', 'களவாணி 4' என தொடர்ச்சியாக சற்குணம் சாருக்கு ஐடியா வந்துக் கொண்டே இருக்கும் என நினைக்கிறேன். கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். பல படங்களில் பல நடிகர்களோடு நடித்துள்ளேன். ஆனால், இளவரசு சாருடன் நடிக்கும் போது மட்டும் தான் சந்தோஷமாக திருப்தியாக உணர்வேன். நல்ல உரிமையுடன் அவரை கிண்டல் பண்ணுவேன்.

'களவாணி' படத்தின் போது புதுப் பெண் ஓவியா என்றேன். ஆனால், 'களவாணி 2'வில் ஓவியாவுடன் நடித்துள்ளேன் என்கிறேன். அந்தளவுக்கு அவர் சூப்பர் ஸ்டாராகிவிட்டார். அவரது வளர்ச்சி எனக்கு பெருமையாக இருக்கிறது. இயக்குநர் சற்குணம் படத்தில் புதுமுக நடிகர்கள் நடித்தால் கூட, தேர்ந்த நடிகர்கள் போல நடிக்க வைத்துவிடுவார். அவரது படத்தில் ஒவ்வொரு காட்சியுமே உஷாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் புதிதாக வந்தவர்கள் நம்மை தூக்கி சாப்பிட்டுவிடுவார்கள். அது தான் சற்குணம் சாருடைய திறமை" என்று பேசினார் சரண்யா பொன்வண்ணன்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x