Last Updated : 08 Aug, 2017 02:40 PM

 

Published : 08 Aug 2017 02:40 PM
Last Updated : 08 Aug 2017 02:40 PM

உலகமயமாக்கலால் தமிழ்ப் பெண்களுக்கு மேலும் சுதந்திரம் கிடைத்துள்ளது: இயக்குநர் ராம்

உலகமயமாக்கலால் தமிழ்ப் பெண்களுக்கு மேலும் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் கிடைத்திருக்கிறது என்று இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகவுள்ளது 'தரமணி'. தினமும் படக்குழுவினர் வெளியிடும் போஸ்டர்களில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும், இப்படத்தின் டீஸர்கள் மற்றும் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஜே.சதீஷ்குமார் தயாரித்திருக்கிறார்.

'தரமணி' கதைக்களம் குறித்து இயக்குநர் ராம் கூறியிருப்பதாவது:

அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவன் நான். எனது சுற்றுப்புறத்தில் வசிக்கும் இளைஞர்கள், அவர்களது வாழ்க்கை முறை மற்றும் அவர்களது கலாச்சாரம் ஆகியவற்றில் நான் கண்ட விஷயங்களில் எனது புரிதலிலும் கண்ணோட்டத்திலும் உருவாகிய கதை தான் 'தரமணி'.

உலகமயமாக்கலால் தமிழ்ப் பெண்களுக்கு மேலும் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் கிடைத்திருக்கிறது. நவீன சிந்தனைகளுக்கும் பழமைவாத சிந்தனைகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் தற்போதய ஆண் வர்க்கம் தங்கள் காதலி/மனைவியை புரிந்துகொள்வதில் சந்திக்கும் சிரமங்கள் பற்றி 'தரமணி' படத்தில் பேசியுள்ளேன்.

இது தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிய படம் மட்டுமே என்பது உண்மையல்ல. 'தரமணி' பல கலாச்சாரம், பல்வேறு பின்னணியிலிருந்து சென்னைக்கு வந்து வாழும் இளைஞர்கள் பற்றிய பொதுவான படம். எல்லா இளைஞர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படமாக 'தரமணி' இருக்கும்

இவ்வாறு ராம் தெரிவித்துள்ளார்.

'தரமணி' படத்தைத் தொடர்ந்து, மம்மூட்டி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள 'பேரன்பு' படத்தையும் இயக்கி முடித்துள்ளார் ராம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x