Published : 02 Aug 2017 03:28 PM
Last Updated : 02 Aug 2017 03:28 PM
'மெர்சல்' படத்தில் வரும் காட்சிகளை ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கைதட்டி வரவேற்பார்கள் என்று திரைக்கதை அமைத்திருக்கும் விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
'மெர்சல்' படத்துக்கு இன்னும் சுமார் 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஒரே ஒரு பாடல் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டியதுள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பாக, படத்தின் எடிட்டிங் பணிகளை முடித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் பின்னணி இசைக்கு அளிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்துக்கு திரைக்கதை அமைத்திருக்கும் 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத், "இந்தப் படத்தில் உள்ள உணர்வுப்பூர்மான காட்சிகள் மக்களை பெருமளவில் ஈர்க்கும். 'மெர்சல்' படத்தில் வரும் காட்சிகளை ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கைதட்டி வரவேற்பார்கள்.
அட்லீயின் இரண்டு படங்கள் எனக்கு மிகவும் பிரியமானவை. ஒரு கதைக்கான யோசனையுடன் அட்லீ என்னை அணுகினார். அந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை திரைக்கதையாக உருவாக்கினேன். அப்படித் தான் 'மெர்சல்' உருவானது." என்று தெரிவித்துள்ளார்.
கிராமத்து இளைஞர், மருத்துவர் மற்றும் மேஜிக் நிபுணர் என மூன்று வேடங்களில் நடித்துள்ளார் விஜய். நித்யாமேனன், காஜல் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 20-ம் தேதி 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தீர்மானித்துள்ளது படக்குழு. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
தங்களுடைய நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக தயாரித்திருக்கிறது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT