Published : 13 Jul 2017 05:48 PM
Last Updated : 13 Jul 2017 05:48 PM
கேளிக்கை வரிப் பிரச்சினைகள் ஜூலை 24-ல் முடிவுக்கு வரும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நம்பிக்கை
டிக்கெட் விலையில் ஜிஎஸ்டி வரியோடு கூடுதலாக விதிக்கப்பட்ட 30 சதவித மாநில வரி பற்றி முடிவெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக அரசு சார்பில் உள்துறை செயலாளர்கள் மற்றும் தொழில்துறை செயலாளர்கள் பங்கேற்றார்கள். தமிழ் திரையுலகினர் சார்பில் தமிழ் திரைப்பட வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேசியதாவது:
கேளிக்கை வரியை ரத்து செய்யச் சொல்லி அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம். ஏனென்றால் அது தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும். தமிழ் திரையுலகம் தற்போதிருக்கும் சூழலில் ஜிஎஸ்டி வரியின் மீது கேளிக்கை வரி 30 சதவீதம் என்பது மிகவும் கஷ்டமான சூழலாக கருதினோம். அது குறித்து விவாதிப்போம்.
இது குறித்த இறுதி முடிவை ஜூலை 24-ம் தேதி நடக்கவுள்ள இறுதிக் கூட்டத்தில் அறிவிப்போம் என்று சொல்லியுள்ளார்கள். தமிழக திரையுலகின் வளர்ச்சியில், எம்ஜிஆர் ஐயா நூற்றாண்டு விழா நடைபெறும் இந்த வேளையில் நல்லதொரு முடிவு வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
இவ்வாறு விஷால் பேசினார்.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:
முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. கேளிக்கை வரி, திரையரங்க கட்டணம் மற்றும் திரைப்படத்துறையை ஒழுங்குபடுத்துவது குறித்து பேசினோம். அவர்களுடைய கருத்தைத் தெரிவித்து, சில நிபந்தனைகளை விதித்துள்ளார்கள். அதனை மாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்கள். சில விஷயங்களை மட்டும் மீண்டும் பேசலாம் என்றார்கள்.
இது குறித்து திரைப்பட வர்த்தக சபையில் கலந்து ஆலோசித்து, மீண்டும் ஜூலை 24-ம் தேதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள உள்ளோம். அக்கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT