Published : 26 Jul 2016 01:20 PM
Last Updated : 26 Jul 2016 01:20 PM
தொடர்ச்சியாக 'சபாஷ் நாயுடு' படக்குழுவில் மாற்றம் ஏற்பட்டு வருவதால், வெளியீட்டு தேதியிலும் மாற்றம் ஏற்படும் என தெரிகிறது.
கமல் இயக்கி நடித்து வரும் படம் 'சபாஷ் நாயுடு'. ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. அமெரிக்க படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய படக்குழு, படப்பிடிப்பு முடிந்த காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகளை துவக்கியது.
அப்பணியின் இடையே கமல் அவரது அலுவலக மாடிப்படியில் இருந்து கீழே தவறி விழுந்து கால் எலும்பு முறிந்ததால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் இன்னும் சில நாட்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டும், மேலும் ஒரு மாதத்துக்காவது கமல் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
இந்நிலையில், 'சபாஷ் நாயுடு' படத்தில் எடிட்டராக பணிபுரிந்த ஜேம்ஸ் ஜோசப்பின் மனைவிக்கு கேரளாவில் விபத்து ஏற்பட்டதால் அமெரிக்க படப்பிடிப்பில் இருந்து கிளம்பினார். எப்போதுமே படப்பிடிப்பு தளத்திலேயே எடிட்டிங் பணிகளை கவனிக்கு கமல், எடிட்டர் இல்லாமலே முதற்கட்ட படப்பிடிப்பை முடித்தார்.
தற்போது ஒளிப்பதிவாளர் ஜெயா கிருஷ்ணாவின் பணிகளால் திருப்தி அடையாத கமல், அவருக்கு பதிலாக இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு வேறொரு ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.
ஏற்கெனவே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது டி.கே.ராஜீவ் குமார் இயக்குநராக பணியாற்றினார். ஆனால், அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தானே இயக்குநராகவும் பணியாற்ற தொடங்கினார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் படம் 'சபாஷ் நாயுடு'. செப்டம்பர் மாதம் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் கமல். அதற்குள் எடிட்டர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டவர்களுக்கான தேர்வு முடிவடைந்து, ஒரே கட்டமாக படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT