Last Updated : 20 Jan, 2017 06:21 PM

 

Published : 20 Jan 2017 06:21 PM
Last Updated : 20 Jan 2017 06:21 PM

மெரினா போராட்டத்தில் கவனம் ஈர்த்த திரை பிரபலங்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் நடைபெற்று வரும் போராட்ட களத்தில், சில திரையுலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்கள்.

ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்று மாலை பெரும் திரளான இளைஞர்கள் இதில் பங்கெடுத்துள்ளனர். இதனால் மெரினா கடற்கரையைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இப்போராட்ட களத்தில் திரையுலக நட்சத்திரங்கள் சிலரும் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தார்கள். இன்று காலை சூர்யா மெரினாவுக்குச் சென்று இளைஞர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு, பின்னால் சில மணி நேரம் அமர்ந்துவிட்டு, பின்பு நடிகர் சங்கத்தின் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

இப்போராட்டத்தில் கடந்த 2 நாட்களாக இளைஞர்கள் மத்தியில் பெரும் கொண்டாடப்படும் நாயகனாக திகழ்ந்தார் லாரன்ஸ். முழுக்க மெரினாவில் போராடி வரும் இளைஞர்களோடு இருந்து சாப்பாடு, மருந்து வகைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். மேலும், பெண்கள் வசதிக்காக MOBILE TOILET வசதிகள், கேரவன்கள் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்திருந்தார். அங்குள்ள தம்பதியினர் தன்னுடைய குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கூறினார். அக்குழந்தைக்கு தமிழ் அரசன் என்று பெயர் சூட்டினார்.

இப்போராட்டத்தில் ஆரி மற்றும் செளந்தர் ராஜா ஆகிய இருவரும் அங்கேயே இருந்து போராடி வருகிறார்கள். இளைஞர்கள் உட்காருவதற்கு ரோட்டை சுத்தம் செய்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார் மன்சூர் அலிகான்.

அதே போல திரைப்பட தயாரிப்பாளர் வினோத் குமாரும் சுமார் 10 MOBILE TOILET வசதிகளை ஏற்பாடு செய்துக் கொடுத்தார். மேலும், நடிகர் விவேக்கும் தண்ணீர் பாட்டில்கள், சாப்பாடு மற்றும் தொப்பிகள் ஆகியவற்றை கொண்டு சென்று போராட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வழங்கினார். போராட்ட இளைஞர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு என சாப்பாடு தயார் செய்து வழங்கினார் இசையமைப்பாளர் இமான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x