Published : 31 Mar 2017 12:25 PM
Last Updated : 31 Mar 2017 12:25 PM
மலேசிய சுற்றுலா தூதர் பதவி தரவிருப்பதாக வெளியான செய்தி உண்மை இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், அரசு முறை சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஐந்து நாட்கள் பயணமாக வந்துள்ள அவர், சென்னையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இன்று காலை (வெள்ளிக்கிழமை) ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார்.
மலேசிய பிரதமர் சந்திப்பைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் ரஜினி பேசியது, "'கபாலி' படப்பிடிப்புக்காக மலேசியாவில் 2 மாதங்கள் இருந்தேன். அரசாங்கத்தின் மிகப்பெரிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்க அணுகியபோது, அங்கு அனைவருமே பிஸியாக இருந்ததால் சந்திக்க இயலவில்லை.
மலேசிய பிரதமர் சென்னை வருகிறார் என்று தெரிந்தவுடன், அவரை எனது இல்லத்துக்கு அழைத்திருந்தேன். என்னுடைய அழைப்பை ஏற்று வந்திருந்தார். 'கபாலி' படத்தின் சுமார் 20 நிமிடக் காட்சிகளைப் பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
மலேசியாவில் இன்னும் பல படங்களின் படப்பிடிப்பு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது மரியாதை நிமத்தமான சந்திப்பு மட்டுமே. மலேசிய சுற்றுலா தூதர் பதவி தரவிருப்பதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை
ரசிகர்களின் நீண்ட கால வேண்டுகோளுக்கு இணங்க ஏப்.11 - 16ம் தேதி வரை ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கவுள்ளேன். அதற்கான ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறவுள்ளது.அதில் அரசியல் குறித்த பேச்சு எதுவுமே இல்லை" என்று தெரிவித்தார்.
மேலும், பத்திரிகையாளர்கள் அரசியல் குறித்த கேள்வி எழுப்பும் முன்பே "அரசியல் வேண்டாம்" என்று பதிலளித்தார்.
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தனது ட்விட்டர் பக்கத்தில் "தற்போது தான், ரஜினிகாந்த் அவர்களை, அவரது வீட்டில் நட்புரீதியில் சந்தித்துவிட்டு வந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT