Published : 23 Nov 2014 11:25 AM
Last Updated : 23 Nov 2014 11:25 AM
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடித்திருக்கும் 'ஐ' இறுதிகட்டப் பணிகள் முடிந்து பொங்கல் 2015 அன்று வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
டிசம்பர் வெளியீடு இருந்தது ஏன் பொங்கலுக்கு தள்ளிப்போனது ஏன் என்பது குறித்து திரையுலகில் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்:
* 'ஐ' பட்ஜெட் அதிகம் என்பதால், அதிக திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்திருக்கிறது ஆஸ்கர் நிறுவனம். ஆனால், டிசம்பரில் 'லிங்கா' வெளியாக இருப்பதால் அதிக திரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது.
* செப்டம்பர் மாதம் இசை வெளியீடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தான் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. DI, பின்னணி இசை, இதர மொழிகளின் டப்பிங் என வெவ்வேறு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதும் தாமதத்திற்கு ஒரு காரணம்.
* 'ஐ' படத்தில் கூன் விழுந்து வரும் விக்ரம் கதாபாத்திரம் ஒன்று இருக்கிறது. அப்பாத்திரத்திற்காக விக்ரம் அதிக சிரமப்பட்டு பேசி வருகிறார். அதுவும் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் அவரே டப்பிங் பேசி வருவதும் ஒரு காரணம்.
* அதிக பட்ஜெட் படம் என்பதால் பட நிறுவனமும், பண நெருக்கடியில் சிக்கிவிட்டது. "எப்போதோ முடிந்து வெளியாகி இருக்க வேண்டிய படம் 'ஐ'" என்று ஷங்கர் பேட்டி ஒன்றில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
* படத்தின் தயாரிப்பாளர் தமிழ் இசை வெளியீட்டு விழா போலவே, தெலுங்கு மற்றும் இந்தி இசையினையும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார். தெலுங்கு இசை வெளியீட்டு விழாவிற்கு ஜாக்கிசான் மற்றும் இந்தி இசை வெளியீட்டு விழாவிற்கு சில்வஸ்டர் ஸ்டோலன் வரவிருக்கிறார்கள் என்று தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார். அனைத்தையும் திட்டமிட்டு முடித்து, ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டதும் ஒரு காரணம்.
* படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த தயாரிப்பு நிறுவனம் மட்டும் ஒப்புக் கொண்டால், அந்நிறுவனம் ஒரு தமிழ் படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கி வெளியிடும் முதல் படமாக 'ஐ' திகழ இருக்கிறது. இதற்கான இறுதி கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT