Published : 30 Mar 2017 03:43 PM
Last Updated : 30 Mar 2017 03:43 PM
விஷாலின் வளர்ச்சியைப் பார்த்து பெருமையாக இருக்கிறது என்று விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் ஏப்ரல் 2-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணி, விஷால் தலைமையில் ஒரு அணி, கேயார் தலைமையில் ஒரு அணி என 3 அணிகள் போட்டியிடுகின்றன.
இதில் விஷால் தலைமையிலான அணியின் கொள்கை, கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை விளக்கும் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில் விஷாலின் தந்தையான ஜி.கே.ரெட்டி கலந்து கொண்டு பேசியதாவது, "நான் வியாபாரத் துறையில் இருந்தாலும், விஷாலை நடிக்க வைக்க வேண்டும் என ஆரம்பகாலத்தில் விரும்பினேன்.
விஷால், விக்ரம் கிருஷ்ணா இருவரில் ஒருவரையாவது நாயகனாக வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். நிறைய கம்பெனிகளுக்கு விஷாலை அழைத்துச் செல்வேன். பலரும் 'பையன் கருப்பாக இருக்கிறான்' என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள்.
யார் என்ன சொன்னாலும், திரைத்துறையில் நன்றாக வருவான் என்று என் மகன் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. யாரையும் நம்பாமல் வேறு ஒருவரது பெயரில் சொந்தமாக படம் தயாரித்தேன். அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த இடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இந்நிலைக்கு வந்துள்ளார் விஷால்.
விஷாலின் வளர்ச்சியைப் பார்த்து ரொம்பப் பெருமையாக இருக்கிறது. மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். மிகப்பெரிய விஷயங்களில் கூட துணிச்சலாக இறங்கிச் செய்கிறார்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT