Published : 03 Sep 2018 06:46 PM
Last Updated : 03 Sep 2018 06:46 PM

சிவகார்த்திகேயன் சினிமாவில் சம்பாதித்தது இதுதான்: சூரி நெகிழ்ச்சி

ஒவ்வொரு குடும்பத்திலும் ரசிகர்களை உருவாக்கியதுதான் சிவகார்த்திகேயன் சினிமாவில் சம்பாதித்தது என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் சூரி.

சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள படம் ‘சீமராஜா’. பொன்ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், காமெடியனாக சூரி நடித்துள்ளார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சூரி, “ ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்கள் என்னை எந்த அளவுக்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததோ, அதைத்தாண்டி இந்த ‘சீமராஜா’ என்னைக் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

பொன்ராம், சிவா, சூரி கூட்டணி நல்லா இருக்கும் என மக்கள் பேசுகிறார்கள். அப்படி எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி. இந்தப் படத்தில் என் உடலைப் பார்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார்கள். சிவா, பொன்ராம், முத்துராஜ் என இந்தப் படத்தில் 3 ஹீரோக்கள். முத்துராஜ் சார் வேலை செய்யும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்ததே இல்லை. அது இந்தப் படத்தில் நிறைவேறி இருக்கிறது.

‘சிவா அதிர்ஷ்டத்தால் மேலே வந்துட்டார்’னு சிலர் பேசுறாங்க. அதிர்ஷ்டம் வரும், போகும்... ஆனால், திறமை இல்லாமல் அந்த இடத்தைத் தக்க வைக்கவே முடியாது. இந்த நிலைக்கு வர சிவா எவ்வளவு கஷ்டப்பட்டார்னு எனக்குத்தான் தெரியும். அதுதான் ஒவ்வொரு குடும்பத்திலும் அவருக்கென ரசிகர்களை உருவாக்கியிருக்கிறது.

எங்கு போனாலும் சிவாவைப் பற்றி எல்லோரும் பாசமாகக் கேட்கிறார்கள். அதுதான் அவர் இந்த சினிமாவில் சம்பாதித்ததாக நான் நினைக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 13-ம் தேதி உலகம் முழுவதும் ‘சீமராஜா’ ரிலீஸாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x