Published : 27 Sep 2018 06:40 PM
Last Updated : 27 Sep 2018 06:40 PM

மணிவண்ணனைப் போல புதிய பாணி: சத்யராஜ் புகழாரம்

மணிவண்ணனைப் போல புதிய பாணியை அரசியல் படத்தில் இயக்குநர் புகுத்தியிருக்கிறார் என சத்யராஜ் கூறியுள்ளார்.

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நோட்டா’. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். மெஹ்ரீன் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், ‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்த், சத்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சத்யராஜ், “நடப்பு அரசியலை அதிரடியாகப் படமாக எடுக்கும் தைரியம் இயக்குநர் மணிவண்ணனுக்கு மட்டுமே இருந்தது. ‘அமைதிப்படை’, ‘கோ’ என அரசியல் படங்களில் புதிய பாணியைப் புகுத்தியது போல, இந்தப் படத்திலும் புகுத்தியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த் சங்கர்.

எனக்குப் பொதுவாகவே வேறு மொழியில் பேசி நடிப்பதுதான் கொஞ்சம் கஷ்டமான விஷயம். ‘நண்பன்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக, தெலுங்கைத் தமிழில் எழுதி வைத்துக்கொண்டு ஈஸியாகப் பேசிவிடலாம் என நினைத்தேன். ஆனால், ஒருநாள் முழுவதும் முயன்றும் என்னால் ஒரிஜினல் தெலுங்கில் பேசவே முடியவில்லை.

ஆனால், இந்தப் படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவோ, அழகான தமிழ் உச்சரிப்புடன் வசனங்களைப் பேசியதுடன், நான்கு பக்க வசனங்களை ஞாபகமாக வைத்துப் பேசுவது கண்டும் பிரமித்துப் போனேன். நீண்ட நாட்களாகவே எந்த மேக்கப்பும் இல்லாமல் இயல்பான கெட்டப்பில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அந்த ஆசையை இதில் நிறைவேற்றி வைத்துவிட்டார் ஆனந்த் சங்கர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x