Published : 29 Sep 2018 03:00 PM
Last Updated : 29 Sep 2018 03:00 PM

முதல் நாளில் ரூ.8 கோடிக்கு மேல் வசூல்: ‘செக்கச்சிவந்த வானம்’ படக்குழு மகிழ்ச்சி

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘செக்கச்சிவந்த வானம்’, தமிழகத்தில் ரூ.8 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'செக்கச்சிவந்த வானம்'. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டது.

மல்டி ஸ்டாரர் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே செப்டம்பர் 27-ம் தேதி ‘செக்கச்சிவந்த வானம்’ வெளியானது. விமர்சனமும் படத்துக்கு சாதகமாக அமைந்ததால், தமிழகத்தில் முதல் நாளில் 8.05 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இதனால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

அக்டோபர் 18-ம் தேதி தான் அடுத்த பெரிய படமான ‘சண்டக்கோழி 2’ வெளியாகவுள்ளதால், இப்படம் போட்டியின்றி ஓடும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள். வரும் வாரம் ‘நோட்டா’, ‘96’ உள்ளிட்ட சில படங்கள் வெளியானாலும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்துக்கு பிரச்சினை இருக்காது என்றும் குறிப்பிட்டார்கள்.

அமெரிக்காவில் இப்படத்தின் வசூல் 1 மில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று கணித்திருக்கிறார்கள். மேலும், பாலிவுட் பட உலகின் முன்னணி வர்த்தக நிபுணரான தரண் ஆதர்ஷ் “ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் வெளியான அனைத்து மொழிப் படங்களின் வசூலை விட ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வசூல் அதிகம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x