Last Updated : 01 Jun, 2019 02:03 PM

 

Published : 01 Jun 2019 02:03 PM
Last Updated : 01 Jun 2019 02:03 PM

செல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட்-2 எடுக்க வேண்டும்: பார்த்திபன்

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் எடுக்க வேண்டும் என்பது என் விருப்பம் எனத் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ‘ஒத்த செருப்பு’. ராம்ஜி ஒளிப்பதிவுள்ள செய்துள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் இன்ஜினீயராகப் பணியாற்றியுள்ளார்.

ஒருவர் மட்டுமே படம் முழுக்க நடிப்பது என்ற புதிய முயற்சியைத் தமிழ் சினிமாவில் கையாண்டுள்ளார் பார்த்திபன். விரைவில் இந்தப் படம் வெளிவர இருக்கிறது. மேலும், உலகத் திரைப்பட விழாக்களிலும் இதைத் திரையிடத் திட்டமிட்டுள்ளார் பார்த்திபன்.

இந்நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்குப் பேட்டியளித்த பார்த்திபனிடம், ‘இரண்டாம் பாகம் எடுக்கும் காலகட்டம் இது. உங்களுக்கு அப்படி ஏதேனும் எண்ணமிருக்கிறதா?’ என்று கேட்கப்பட்டது.

“ ‘புதிய பாதை’ படத்தின் இரண்டாம் பாகம் ஏன் எடுக்கக்கூடாது என நேற்று கூட ஒரு தயாரிப்பாளர் கேட்டார். ‘கதை தயாராக இருக்கிறது. உங்களிடம் பணம் இருந்தால் சொல்லுங்கள்’ என்றேன். ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையும் தயாராக இருக்கிறது. அடுத்தது அதைத்தான் இயக்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன்.

‘ஆயிரத்தில் ஒருவன் 2’ பற்றி உலகமே பேசிக் கொண்டிருக்கிறது. அந்த நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். ‘என்.ஜி.கே.’ வெற்றி பெற்றால், செல்வராகவனுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும். அதில், ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தை அவர் இயக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதில் நான் இருக்கிறேனா, இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை” எனப் பதில் அளித்துள்ளார் பார்த்திபன்.

செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம், கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது. கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x