Published : 06 Jun 2019 03:27 PM
Last Updated : 06 Jun 2019 03:27 PM

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’: சண்டிகர் படப்பிடிப்பு நிறைவு

சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘சூரரைப் போற்று’ படத்தின் சண்டிகர் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சூரரைப் போற்று’. ‘இறுதிச்சுற்று’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கி வருகிறார் சுதா கொங்கரா. சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக், கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வெளியானது.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் எடுக்கப்படுகிறது. ஆனால், வாழ்க்கை வரலாறாக எடுக்கப்படவில்லை. அவர் செய்த பல நல்ல விஷயங்களை மட்டும் வைத்து இந்தப் படம் உருவாகிறது.

சென்னையில் இதன் ஷூட்டிங் தொடங்கி, நடைபெற்று வந்தது. பின்னர், சில முக்கியமான காட்சிகளை சண்டிகரில் படம்பிடித்துள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட கேமராக்களைப் பயன்படுத்தி சண்டிகர் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. நேற்றுடன் (மே 5) அங்கு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. எனவே, படக்குழுவினர் சென்னைக்குத் திரும்பியுள்ளனர்.

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்கு நடுவே, சிவா இயக்கத்தில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார் சூர்யா. இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்தை, ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x