Published : 17 Jun 2019 08:15 PM
Last Updated : 17 Jun 2019 08:15 PM

நடிகர் சங்கத்தை சுத்தம் செய்யவே 3 ஆண்டுகள் ஆகிவிட்டன: விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில், நாடக நடிகர்களை உறுப்பினர்களாகச் சேர்ப்பது எங்கள் கடமை என விஷால் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தேர்தல், வருகிற 23-ம் தேதி எம்.ஜி.ஆர். ஜானகி மகளில் கல்லூரியில் நடைபெற உள்ளது. கடந்த முறை வெற்றிபெற்ற நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட ‘பாண்டவர் அணி’யும், கே.பாக்யராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கரதாஸ் அணி’யும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

எனவே, நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய நாடக நடிகர்களைச் சந்தித்து இவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். அதன்படி, திண்டுக்கல்லில் இன்று (ஜூன் 17) நாடக நடிகர்களைச் சந்தித்தபின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர் பாண்டவர் அணியினர்.

பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்த அவர்களிடம், ‘கடந்த தேர்தலின்போது, நாடக நடிகர்களை உறுப்பினர்களாகச் சேர்ப்போம் என வாக்குறுதி தந்தீர்கள். அவர்களை இணைத்துவிட்டீர்களா?’ என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த விஷால், “நடிகர் சங்க உறுப்பினர்களாக இருக்கக்கூடிய 3 ஆயிரத்து 139 பேரில், பல பேர் வெவ்வேறு காரணங்களுக்காகச் சேர்க்கப்பட்டவர்கள். அவர்களில் சரியான முகவரி இல்லாமல், தொடர்புகொள்ளவே முடியாத சிலரை விதிப்படி நீக்கி நடிகர் சங்கத்தை சுத்தப்படுத்தவே 3 வருடங்கள் ஆகிவிட்டன.

30 வருடங்களாக ஒரே நிர்வாகத்தின் கீழ் இருந்த நடிகர் சங்கத்தில் நடக்காததை, கடந்த 3 வருடங்களில் நடத்திக் காட்டியுள்ளோம். இதில் பாதி நேரத்தைக் கட்டிடம் எழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளோம். ஒரு உறுப்பினர், மற்ற உறுப்பினர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், அவர்களைத் தொடர்புகொள்ள வசதியாக தொலைபேசி எண்கள் என முறைப்படுத்தி, ஒரு இணையதளத்தையும் உருவாக்கியுள்ளோம். மேலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை சமயங்களில் சந்திக்க வேண்டும் என்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளோம்.

முக்கியமாக, அனைவரும் நேர்மையுடன் பொதுக்குழுவில் கலந்துகொண்டு, கேள்வி கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். ‘இத்தனை வருடங்களாக நடந்த பொதுக்குழுவில் கேள்வியே கேட்க முடியாது. நீங்கள் அந்த சுதந்திரத்தைக் கொடுத்துள்ளீர்கள். இப்போது எங்களால் கேள்வி கேட்க முடிகிறது. அதற்கான பதிலும் கிடைக்கிறது’ என உறுப்பினர்கள் சந்தோஷப்படுகின்றனர். இதை முடிக்கவே எங்களுக்கு மூன்றரை வருடங்கள் ஆகிவிட்டன.

இப்போது எங்களுடைய குறிக்கோள், கட்டிடம் மட்டும்தான். இன்னும் 6 மாதங்களில் அது தயாராகிவிடும். அது முடிந்தவுடன், அடுத்தது, நேர்மையாகவும் நியாயமாகவும் உழைக்கிற நாடக நடிகர்களை உறுப்பினர்களாகச் சேர்ப்போம். இதை நாங்கள் தேர்தல் வாக்குறுதியாகச் சொல்லவில்லை. இது எங்கள் கடமை” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x