Published : 10 Jun 2019 04:36 PM
Last Updated : 10 Jun 2019 04:36 PM

ஒரு நகைச்சுவை, அழவைத்துவிட்டுப் போய்விட்டது: கிரேசி மோகனுக்கு வைரமுத்து புகழாஞ்சலி

ஒரு நகைச்சுவை, அழவைத்துவிட்டுப் போய்விட்டது என மறைந்த கிரேசி மோகனுக்குப் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து.

நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் கிரேசி மோகன் இன்று (ஜூன் 10) மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.

கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களை எழுதத் தொடங்கியவர் கிரேசி மோகன். ‘மாது மிரண்டால்’, ‘சாட்டிலைட் சாமியார்’, ‘சாக்லேட் கிருஷ்ணா’, ‘மதில் மேல் மாது’ உள்ளிட்ட 5000-க்கும் மேற்பட்ட நகைச்சுவை நாடகங்களில் முத்திரை பதித்தவர்.

‘சதிலீலாவதி’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘பஞ்ச தந்திரம்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’, ‘காதலா காதலா’, ‘அருணாச்சலம்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘தெனாலி’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கிரேசி மோகனின் மறைவு, திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“கிரேசி மோகன் மறைவு எதிர்பாராதது. ஒரு நகைச்சுவை, அழவைத்துவிட்டுப் போய்விட்டது. அவர் வெறும் நாடக ஆசிரியர் மட்டும் அல்லர். வெண்பா எழுதத் தெரிந்த விகடகவி. யாரையும் வருத்தப்பட வைக்காத நகைச்சுவையாளர், எல்லாரையும் வருந்தவிட்டுப் போய்விட்டார். சோகம் மறைந்துபோகும்; நகைச்சுவை நிலைக்கும்” என ட்விட்டரில் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார் வைரமுத்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x