Published : 17 Jun 2019 04:47 PM
Last Updated : 17 Jun 2019 04:47 PM

சிறிய இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரையில் ராதிகா

சின்னத்திரைக்கு இரண்டு மாதங்கள் இடைவெளிவிட்ட ராதிகா சரத்குமார், மீண்டும் களமிறங்குகிறார்.

தொலைக்காட்சி சீரியல்களைப் பொறுத்தவரை, ராதிகாவின் பங்கு மிகப்பெரியது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல் உலகில் தடம் பதித்தவர் அவர். தொலைக்காட்சியின் ப்ரைம் டைம் என்பது, இரவு 9 மணி முதல் 10 மணி வரை. அதில், ஒன்பதரை மணிக்கு ராதிகாவின் சீரியல் ஒளிபரப்பாகும் என்பது சன் டிவியின் பொதுவான விதியாக இருந்தது.

ஆனால், ராதிகா நடிப்பில் கடைசியாகத் தொடங்கப்பட்ட ‘சந்திரகுமாரி’, அந்த வரலாற்றை மாற்றி எழுதியது. முதன்முறையாக ராதிகா சீரியலின் நேரம் மாற்றப்பட்டது. இரவு ஒன்பதரை மணியில் இருந்து, மாலை ஆறரை மணிக்கு ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டது.

அந்த சமயத்தில், ஓய்வு தேவை என்பதால் சின்னத்திரையில் இருந்து இரண்டு மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொள்வதாக கடந்த மார்ச் 9-ம் தேதி அறிவித்து, தன்னுடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார் ராதிகா. தற்போது ‘சந்திரகுமாரி’ சீரியலில் அவருக்குப் பதிலாக விஜி சந்திரசேகர் நடித்து வருகிறார்.

ராதிகா மீண்டும் சீரியலில் நடிக்க வேண்டும் என அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், விரைவில் மீண்டும் சின்னத்திரையில் களமிறங்க இருப்பதாக ராதிகா தெரிவித்துள்ளார்.

“என்னை மீண்டும் தொலைக்காட்சிக்கு வரச் சொல்லும் உங்கள் அனைத்து ட்வீட்டுகளுக்கும் அன்புக்கும் நன்றி. விரைவில் இதுகுறித்து அறிவிப்பேன். உங்களுக்கு உண்மையான பொழுதுபோக்கைத் தர, நிறைய திட்டமிட வேண்டியுள்ளது. ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ராதிகா.

இந்த ட்வீட்டால் ராதிகா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x