Published : 30 Sep 2014 03:53 PM
Last Updated : 30 Sep 2014 03:53 PM

ஹாக்கி: பலமான தென்கொரியாவை வீழ்த்தி இறுதியில் இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

இன்சியானில் இன்று நடைபெற்ற பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் பலமான தென் கொரியா அணியை இந்தியா 1-0 என்று வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்துள்ளது.

சியான்ஹாக் ஹாக்கி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் வெற்றிக்கான ஒரே கோலை அடித்தார்.

பாகிஸ்தான், மலேசியா அணிகளுக்கு இடையிலான மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெறும் அணியுடன் இந்தியா தங்கப்பதக்கத்திற்காக விளையாடும் என்று எதிர்பார்க்கலாம்.

தென் கொரியா அணியின் எல்லைக்குள் நுழைந்து அதிரடி ஆட்டம் ஆடிய இந்திய அணியினர் பிறகு எதிர் தாக்குதலை சரியான தற்காப்பு உத்தியுடன் திறம்பட தடுத்தனர்.

ஆட்டத்தின் 2வது கால்பகுதியில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வி.ஆர்.ரகுநாத் அதனை கோலாக மாற்ற முடியவில்லை.

பிறகு எஸ்.வி.சுனில் வலது புறத்தில் அற்புதமான தாக்குதல் தொடுத்து வேகமாக முன்னேறினார். அங்கிருந்து கொரிய எல்லைக்குள் பந்தை அடிக்க ஆனால் தென்கொரிய கோல் கீப்பர் இந்த முறையும் தடுத்து விட்டார்.

கடைசியில் இந்தியப் பகுதிக்குள் நுழைந்த தென் கொரிய வீரர்கள் தவறாக ஆட பந்தைப் பெற்ற இந்தியா படுவேகமாக கொரிய கோல் நோக்கி விரைந்தது. பந்தை குர்விந்தர் சிங் சாண்டி எடுத்துச் சென்று இரண்டு கொரிய தடுப்பாட்ட வீரர்களைக் கடந்து சென்று அடித்தார் ஆனால் பந்தை வாங்கி அடிக்க முடியவில்லை. அருமையான வாய்ப்பு பறிபோனது.

ஒருவழியாக 44வது நிமிடத்தில் ஆகாஷ் தீப் கைக்கு பந்து வர அவர் பெனால்டி பகுதிக்குள் இருந்தார். ஆனால் அவரோ கொரிய கோல்கீப்பருக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றிருந்தார். தன்னிடம் வந்த பந்தை திரும்பியிருந்த நிலையிலும் கால்களுக்கு இடையே அதனை அப்படியே அபாரமாக கோல் நோக்கி அடிக்க கொரியா கோல் கீப்பர் வேடிக்கையே பார்க்க முடிந்தது.

அதன் பிறகு கொரியாவின் தாக்குதல் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்தியா 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடவர் ஹாக்கியில் தங்கம் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x