Published : 07 Sep 2014 12:51 PM
Last Updated : 07 Sep 2014 12:51 PM

உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி வழக்கு

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோயம்புத் தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய விதிகளின்படி, தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான கால அட்டவணை இல்லாததால், தேர்தல் அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கூறியதாவது:

காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடத்துவதற்காக கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி தமிழக அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி வேட்புமனு தாக்கல் 6-ம் தேதி தொடங்கும் என்றும், வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் ஆகஸ்ட் 16-ம் தேதி என்றும், வாக்குப் பதிவு செப்டம்பர் 18-ம்தேதி நடைபெறும் என்றும் கூறப்பட்டிருந்தது.

எனினும் அந்த அறிவிக்கையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்து விட்டது.

பிறகு மீண்டும் புதிதாக கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தேர்தல் தொடர்பாக அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டது. எனினும் வாக்குப் பதிவு ஏற்கெனவே முதல் அறிவிக்கையில் கூறப்பட்ட அதே செப்டம்பர் 18-ம் தேதி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான செப்டம்பர் 8-ம் தேதிக்கும் வாக்குப் பதிவு நாளுக்கும் இடையே வெறும் 10 நாட்கள் மட்டுமே உள்ளன. இதன்மூலம் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க போதிய அவகாசம் தரப்படவில்லை.

மேலும், தேர்தல் தொடர்பாக அரசிதழில் அறிவிக்கை செய்யப் பட்ட பிறகு வேறொரு நாளில்தான் தேர்தல் தொடர்பான பொது நோட்டீஸ் வெளியிடப்பட வேண்டும். ஆனால் தேர்தல் அறிவிக்கை செய்யப்பட்ட அதே ஆகஸ்ட் 28-ம் தேதியே தேர்தல் தொடர்பான பொது நோட்டீஸ் வெளியிடப்பட்டது தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி சரியல்ல. இதனால் வேட்பாளர் களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

இவ்வாறு வில்சன் கூறினார்.இதனையடுத்து இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x