Last Updated : 29 Apr, 2019 09:25 PM

 

Published : 29 Apr 2019 09:25 PM
Last Updated : 29 Apr 2019 09:25 PM

செல்வராகவனுடன் மீண்டும் பணிபுரிய ஆசை: சூர்யா நெகிழ்ச்சி

செல்வராகனுடன் மீண்டும் பணிபுரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என 'என்.ஜி.கே' ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசினார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'என்.ஜி.கே'. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. மே 31-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் ரகுல் ப்ரீத் சிங் தவிர்த்து, ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள். இது நடிகர் சூர்யா பேசியதாவது:

அரசியல் ரத்தம் சிந்தாத யுத்தம் என்று சொல்வார்கள். அதே மாதிரி யுத்தம் ரத்தம் சிந்துற அரசியல் என்று சொல்வார்கள். செல்வராகவனின் கதையை நான் அப்படித்தான் பார்க்கிறேன். இது வெறும் அரசியல் சார்ந்த த்ரில்லர் படம் மட்டும் அல்ல. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு இது அடுத்த லெவல் என்று சொல்வேன்.

சின்ன அரசியலோடு அவருடைய கருத்து, ரசனை மாதிரி நிறைய விஷயங்கள் 'என்.ஜி.கே' படத்தில் இருந்தது. எடுத்துக் கொண்ட கதை அந்த மாதிரி. அதற்கான நேரத்தையும் அதுவாகவே எடுத்துக் கொண்டது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும், புது படத்துக்கு போகிறமாதிரி இருந்தது. ஏனென்றால், முந்தைய நாள் காட்சிகளை வைத்து அடுத்த நாள் கடந்துவிட முடியாது. இதை தினமும் நிரூபித்துக் கொண்டே இருந்தார்.

2002-ம் ஆண்டு பொது இடத்தில் சந்தித்தோம். அப்போது சின்ன உரையாடல் நடந்தது. 'காதல் கொண்டேன்' பாடல்கள் கட் பண்ணிட்டேன் பார்க்கிறீர்களா என்று போன்கால் வந்தது. அதற்கு முன்பு எந்தவொரு படத்தின் பாடல்களையும், காட்சிகளையும் பார்த்ததே இல்லை. மணி சார் அலுவலகத்திற்கு எதிரில் ஒரு சின்ன எடிட் ஷுட்டுக்கு போன ஞாபகம் இருக்கிறது. பாடல்கள் பார்த்தேன். அப்போது 'உன்கூட எப்போதாவது ஒரு படம் பண்ணனும்யா' என்று கேட்டேன். அதே போல் இன்னொரு இயக்குநரிடம் எப்போது கேட்டேன் என்று ஞாபகமில்லை. 2002-ல் கேட்டது சுமார் 17 ஆண்டுகள் கழித்து இப்போது தான் நடந்துள்ளது.

செல்வா ஸ்டீபன்பர்க்குடன் பணிபுரியவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நினைவாகியுள்ளது. உண்மையில், அவர் காலம் தாண்டி யோசிப்பவர். நான் நடிக்கும் போதும், பேசும் போதும் அப்படித்தான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டது தான் உண்டு. இதே போல் அவரைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பேன். அவருடைய கதைகள் மீதும், அவர் மீதும் அளவுகடந்த காதல், மரியாதை இருக்கிறது. மறுபடியும் ஏதாவது ஒரு கதையில் எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள். உங்களுடன் மீண்டும் பணிபுரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய ஜாம்பவான்களை விடுத்து, யுவனுக்கு நிச்சயமாக ஒரு இடம் இருக்கிறது. காலம் கடந்து நிற்கும் பல பாடல்களை யுவன் கொடுத்திருக்கிறார். மைக்கேல் ஜாக்சன் இறந்தவுடன் தான் என் மகன் பிறந்தான். ஆனால், அவருடைய பாடல்களோடு ரொம்பவே ஒன்றிவிட்டான். அந்த மாதிரி யுவனுடைய பாடல்கள் தமிழ் சினிமாவில் காலம் கடந்து நிற்கும். செல்வராகவன் - யுவன் காம்போவில் உருவான பாடல்களான 'தேவதையைக் கண்டேன்' உள்ளிட்டவற்றைக் கேட்கும் போது கண்ணில் கண்ணீர் வரும். உடனே யுவனுக்கு போன் போட்டு பேசுவேன். இந்த காம்பினேஷனில் படம் பண்ணியது என்பது  என்னுடைய திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கியமானது.

தொழில்நுட்பக் கலைஞர்களுடைய முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல், இப்படியொரு படத்தை கொண்டு வந்திருக்க முடியாது. சாய்பல்லவி ஒரு அழுத்தமான கதாபாத்திரம். இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம் என்று டேக் முடிந்தவுடன் அழுவார். என்ன நீ இவ்வளவு சீரியஸாக எடுத்துக்குற, நாளைக்கு மறுபடியும் ஷுட் பண்ணலாம் என்று சொல்வோம். நடிப்பு மீது அவ்வளவு காதல் இல்லையென்றால், இந்த இடத்துக்கு அவரால் வந்திருக்க முடியாது.

இப்படத்தின் படப்பிடிப்பில் தினமும் ஏதேனும் ஒரு ஆச்சர்யம் இருக்கும். மற்ற படங்கள் வசனங்கள் பேசும் போது வெவ்வேறு ஆங்கிளில் எடுப்பார்கள். ஆனால், செல்வராகவன் படங்களில் ஒரே ஆங்கிள் தான். எந்த ஒரு ஷாட்-கட்டும் கிடையாது, ஆகையால் ஏமாற்றவே முடியாது. ஒரு சின்ன பிழைக் கூட இல்லாமல் இருந்தால் மட்டுமே ஷாட் ஓ.கே ஆகும்.

செல்வராகவனுடன் பணிபுரிந்ததால் சினிமாவை இன்னும் காதலிக்கத் தொடங்கிவிட்டேன். 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படிப்பு இருக்கிறது என்றால், அதைவிட ஒரு சிறந்த விஷயம் இருக்கவே முடியாது. தமிழ் திரையுலகில் ஸ்ட்ரைக், எனக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது ஆகியவற்றால் மட்டுமே தாமதம். இக்கதையும் அதற்கான நேரத்தை எடுத்துக் கொண்டது. ஒரு நாள் கூட சும்மா உட்காரவில்லை. தினமும் இப்படத்துக்கான வேலைகள் நடந்து கொண்டே தான் இருந்தது.

இப்படத்துக்கான டப்பிங் பணிகளின் போது, ஒரு கதையின் அவுட்லைன் சொன்னார். ரொம்பவே நல்லாயிருந்தது. அதை எழுதி முடிக்க காத்திருக்கிறேன். என்னுடைய கேரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கிறேன்.

இவ்வாறு சூர்யா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x