Last Updated : 07 Mar, 2019 01:07 PM

 

Published : 07 Mar 2019 01:07 PM
Last Updated : 07 Mar 2019 01:07 PM

என்னை நல்லவன்னு நம்புவாங்களாப்பா?’ - பாக்யராஜிடம் நம்பியார் கேள்வி

’என்னை இப்படியொரு கேரக்டர்ல நடிக்கக் கூப்புடுறியே. என்னை நல்லவன்னு மக்கள் நம்புவாங்களாப்பா?’ என்று நடிகர் எம்.என்.நம்பியார், நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜிடம் கேட்டார்.

எம்ஜிஆர் என்று சொல்லும்போதே நம் நினைவுக்கு வருபவர்களில் எம்.என்.நம்பியாரும் உண்டு. இயக்குநர் கே.பாக்யராஜும் உண்டு. இந்த இரண்டுபேரும் இணைந்து நடித்த ‘தூறல் நின்னு போச்சு’ படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்கவே முடியாது.

நடிகர் எம்.என்.நம்பியாருக்கு மார்ச் 7ம் தேதி இன்று பிறந்தநாள். நூறாவது பிறந்தநாள். இந்தநாளில், நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜிடம் நம்பியார் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளக் கேட்டோம்.

அப்போது, பாக்யராஜ் தெரிவித்ததாவது:

‘தூறல் நின்னு போச்சு’ கதை பண்ணிட்டிருக்கும் போதே, அந்த குஸ்தி வாத்தியார் கேரக்டருக்கு நம்பியார் சார் நடிச்சா, நல்லாருக்கும்னு தோணுச்சு. குஸ்தி வாத்தியாருக்கு ஏத்த மாதிரியான உடம்பு, கம்பீரம் எல்லாமே அவர்கிட்ட இருக்கே! தவிர, அப்படியொரு நம்பியார் சாரை, மக்களும் இதுவரை பாத்தது இல்ல. அதனால புதுசா இருக்கும்னு நினைச்சேன்.

அவர் வீட்டுக்கு போனேன். அப்போ, வியர்க்கவிறுவிறுக்க பேரக்குழந்தையோட பேட்மிண்டன் விளையாடிட்டிருந்தார். கதையையும் கேரக்டரையும் சொன்னேன். ‘எம்ஜிஆர், சிவாஜிக்கெல்லாம் வில்லனா நடிச்சோம். உங்க தலைவரு (எம்ஜிஆர்) அரசியலுக்குப் போய் ஆட்சியைப் பிடிச்சிட்டாரு. சிவாஜி நடிக்கறதும் குறைஞ்சிருச்சு. நாமளும் அவ்ளோதான்னு நினைச்சிட்டிருந்தேன். நீ என்னடான்னா, இவ்ளோ நல்லவனாட்டம் ஒரு கேரக்டர்ல நடிக்கச் சொல்றியேப்பா. ஏம்பா... மக்கள் என்னை நல்லவன்னு ஏத்துக்குவாங்களா?ன்னு நம்பியார் சார் கேட்டாரு. ‘அதெல்லாம் ஏத்துக்குவாங்க சார்’னு சொன்னேன். சம்மதிச்சாரு.

படத்துல, ஒவ்வொரு காட்சியையும் அப்படி ரசிச்சு ரசிச்சு நடிச்சாரு. அந்த குஸ்தி வாத்தியார் கேரக்டர்ல காமெடியும் கலந்து இருந்ததால, இன்னும் குஷியாயிட்டாரு.

படத்துல நடிக்கும் போது அவர் கூட பழகற வாய்ப்பு கிடைச்சது எனக்கு. அவரோட டைம் கீப் அப் பண்ற முறை, எக்சர்ஸைஸ் பண்றதுக்காக, தினமும் நேரம் ஒதுக்கிடுறது, காபி, டீ எதுவும் குடிக்காம இருக்கறது, உணவுல அப்படியொரு கட்டுப்பாடு, முக்கியமா அசைவமும் சாப்பிடமாட்டாரு. நொறுக்குத்தீனியும் கிடையாது. அப்படியொரு ரியல் ஹீரோவா இருந்தாரு நம்பியார் சார். பிரமிப்பா இருந்துச்சு.

ஒரு சிலரைப் பாத்தா இன்ஸ்பையர் ஆவோம். நம்பியார் சாரைப் பாத்ததும் அப்படித்தான் இருந்துச்சு. ஆனா, நம்மளால அப்படிலாம் இருக்கமுடியுமானு கேள்வியும் வந்துச்சு. நாம இப்படியே பழகிட்டோமே! அற்புதமான மனிதர் நம்பியார் சார். அவரோட ஒர்க் பண்ணினது உண்மையிலேயே எனக்குக் கிடைச்ச பாக்கியம்’’

இவ்வாறு பாக்யராஜ் தெரிவித்தார்.   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x