Published : 31 Mar 2019 07:56 PM
Last Updated : 31 Mar 2019 07:56 PM

சசிகலா பயோபிக் விரைவில் வருகிறது: ராம் கோபால் வர்மா அறிவிப்பால் மீண்டும் சர்ச்சை

 'சசிகலா' வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்கவுள்ளேன் என்றும் விரைவில் படம் வெளியாகும் என்றும்  ராம் கோபால் வர்மா அறிவித்துள்ளார்.

என்.டி.ஆர் வாழ்க்கையை மையமாக வைத்து பாலகிருஷ்ணா நடித்து, தயாரித்த படங்களான 'என்.டி.ஆர் கதாநாயக்குடு' மற்றும் 'என்.டி.ஆர் மஹாநாயக்குடு' ஆகியவை படுதோல்வியை சந்தித்தன. இதனைத் தொடர்ந்து ராம் கோபால் வர்மா தனது இயக்கத்தில் 'லட்சுமி என்.டி.ஆர்' என்ற படத்தை இயக்கத் தொடங்கினார்.

பாலகிருஷ்ணா தயாரித்த படத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நல்லவிதமாக காட்டியிருப்பதாகவும், ஆனால் தான் உண்மைத் தகவல்களை வைத்து இயக்கி வருவதாகவும் ராம் கோபால் வர்மா தரப்பில் தகவல் வெளியானது. இதை வைத்து ஆந்திர அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை உருவானது.

பட வெளியீட்டின் போது, ஆந்திராவை தவிர்த்து மற்ற அனைத்து நகரங்களிலும் வெளியானது 'லட்சுமி என்.டி.ஆர்'. ஆந்திராவில் வெளியிடுவதுத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளார் ராம் கோபால் வர்மா.

இந்நிலையில், 'அறிவிப்பதில் சந்தோஷப்படுகிறேன். விரைவில்' என்று ட்வீட் செய்து அதனுடன் சசிகலா பயோபிக்கான போஸ்டரையும் வெளியிட்டார் ராம் கோபால் வர்மா. மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், ராம் கோபால் வர்மாவின் அறிவிப்பு அமமுக கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.

 

 

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதால் பெங்களூரு சிறையில் உள்ளார் சசிகலா. அவரை அவ்வப்போது அமமுக கட்சித் தலைவர் தினகரன் சந்தித்து பேசி வருகிறார். ராம் கோபால் வர்மாவின் இந்த திடீர் அறிவிப்பு சமூகவலைத்தளத்திலும் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

முன்பாக, 2017-ம் ஆண்டே 'சசிகலா' பயோபிக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் ராம் கோபால் வர்மா. ஆனால், அதற்குப் பிறகு பல்வேறு படங்களை இயக்கி வந்ததால், 'சசிகலா' பயோபிக் குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.

சசிகலா பயோபிக் தொடர்பாக 2017-ம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறிப்புகளில் ராம் கோபால் வர்மா கூறியிருப்பதாவது:

மன்னார்குடி மாஃபியா கட்டுப்பாட்டில் இருக்கும் பழனிச்சாமி தமிழக முதல்வராக. ஆனால், கண்டிப்பாக சிறையிலிருந்து சசிகாலாதான் அரசை நடத்துவார். சக்திவாய்ந்த அம்மாவின் ஆன்மா ஆசிர்வதிக்கவோ, சாபமோ விடாமல் அமைதியாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது. தமிழகத்தின் மற்ற கடவுள்களும், பக்தர்களும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

ஜல்லிக்கட்டில் மிருகங்கள் வதைபடுவதை விரும்பும் தமிழக மக்கள், அரசியல் தலைவர்களால் தாங்கள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படுவதை உணரவில்லையா? சிறையிலிருந்தே தங்கள் குழுக்களை இயக்கும் குற்றவாளிகள் செய்வது டான் சசிகலா மன்னார்குடி மாஃபியாவின் ஆள் பழனிச்சாமியை வைத்து தமிழ்நாடை கட்டுப்படுத்துவதற்கு முன் ஈடாகாது. வாழ்க தமிழகம், வாழ்க இந்தியா.

சசிகலா படம், சசிகலாவின் பின்புலம் பற்றிய கதையின் கதையாக இருக்கும். மன்னார்குடி மாஃபியா மக்கள் மட்டுமே இதை புரிந்து கொள்ளமுடியும். ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலாவின் சிறை அறைக்கு வரும் என நான் நிச்சயமாக நினைக்கிறேன். போயஸ் கார்டன் பணியாளர்கள் சொன்னதின் படி, ஜெயலலிதா, சசிகலாவுக்கு இடையே இருந்த உறவுக்குப் பின் இருக்கும் உண்மை, நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதை என் படத்தில் காட்டுவேன்.

போயஸ் கார்டனின் தோட்டக்காரர் என்னிடம் சொன்னது என்னவென்றால், பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் பழனிச்சாமியை ஆதரிப்பதன் காரணம், அவர்கள் அனைவரும் சசிகலாவால், மன்னார் குடி மாஃபியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதே.

இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x