Published : 10 Mar 2019 06:56 AM
Last Updated : 10 Mar 2019 06:56 AM

திரை விமர்சனம்- பூமராங்

வனநடை மேற்கொள்ளச் சென்ற சிவா என்ற இளை ஞன் காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டுவிடுகிறார். தீயினால் ஏற் பட்ட வடு அவரது முகத்தோற்றத்தை குலைத்துவிடுகிறது. இச்சமயத்தில் மூளைச் சாவு அடைந்த சக்தி என்ற இளைஞனின் முகத்தை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிவாவுக்கு பொருத்துகிறார்கள்.

குணமடைந்து வீடு திரும்பும் சிவா, ஒரு கால்பந்து வீரனாக உற்சாகத்துடன் தனது புதிய வாழ்க் கையத் தொடங்குகிறார். ஆனால் முகம் மாறிய சிவாவைக் கொலை செய்ய ஒரு கூட்டம் துரத்துகிறது. முதலில் அதிர்ந்துபோகும் சிவா, தனக்கு முகம் கொடுத்தவனின் பின்னணியைத் தேடித் துணிவுடன் புறப்படுகிறார். யார் அந்த சக்தி? அவரது கதை என்ன என்பதைச் சிவாவால் கண்டுபிடிக்க முடிந்ததா? தனக்கு முகம் கொடுத்த சக்திக் காகச் சிவா என்ன செய்தார் என்பதுதான் ’பூமராங்’ கதை.

திரைக்கதைக்காக முக மாற்று அறுவை சிகிச்சை எனும் தொழில் நுட்பத்தைத் தேர்வு செய்த இயக்கு நர் ஆர்.கண்ணனைப் பாராட்டலாம். நதிநீர் இணைப்பு, தண்ணீரின்றி பாழ்படும் விவசாயம் போன்ற சமூகக் கருத்துகளைப் படத்தில் சொல்ல இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அதை யும் திரைக்கதை நகர்வுக்காக மேம்போக்காக இயக்குநர் காட்டு கிறார். அதற்கு பக்கபலமாகச் சம கால கார்ப்பரேட் மூளைகள் செய்யும் தில்லாலங்கடிகளையும் துணைக்கு சேர்த்திருக்கிறார். இன் றைய அரசியலை கிண்டலடிக்கும் நையாண்டி வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.

முகம் மாற்றிக்கொண்ட சிவாவை கொல்ல நடக்கும் முயற்சி கள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை முதல் பாகத்தில் கூட்டிவிடுகிறது.ஆனால், இரண்டாம் பாகத்தில் வரும் திரைக்கதை அமைப்பு படத்தை வேறொரு தளத்துக்கு அழைத்து சென்றுவிடுகிறது. ஒரு புறம் காய்ந்த பூமி, இன்னொரு புறம் வீணாக கடலில் கலக்கும் ஆற்று நீர், அதைக் கிராமத்துக்கு திருப் பும் இளைஞரின் போராட்டம், அதை முறியடிக்க கார்ப்பரேட் கிரிமினலின் சதி எனத் திரைக்கதை நகர்கிறது.

20 கிலோ மீட்டர் தூரத்துக்கு மனிதர்களே கால்வாய் வெட்ட முயற்சிப்பதாக காட்டும் காட்சி யில் லாஜிக் இல்லை. சட்ட விஷயங் களைப் பேசும் சுஹாசினி, முன்பின் தெரியாத இளைஞனின் முகத்தை இன்னொருவருக்கு தானமாக வழங்க கையெழுத்திட சொல்வதும் நம்பும்படியாக இல்லை.

சிவா சக்தி என இரண்டு பரிமாணங்கள் கொண்ட வேடங் களை ஏற்று தன் உழைப்பை கொடுத்திருக்கிறார் அதர்வா.

சென்னையிலும் பின்னர் வறண்ட புதுக்கோட்டையிலும் அந்தந்த பகுதிகளின் வாழ்வையும் வறட்சி யையும் நெருக்கமாகப் பதிவு செய் திருக்கிறது பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு. டைட்டில் இசையில் தொடங்கி, வறண்ட பூமி, போராட் டம் என எல்லாவற்றிலும் நம்மை இணைத்து விடுகிறது ரதனின் பின்னணி இசையும் பாடல்களும்.

போதிய காரணம் இருக்கும் ஆக்‌ஷன் காட்சிகளில் கதாநாய கனை ஒரு சாமானிய இளைஞனாக அடக்கி வாசிக்க வைத்திருப்பது, அந்தக் கதாபாத்திரம் மீதான ஈர்ப்பை அதிகமாக்கியிருக்கிறது. சிந்துஜா, ஆர்.ஜே..பாலாஜி இரு வரும் இயல்பான நடிப்பைத் தந் திருக்கிறார்கள். முதல்பாதி படம் முழுவதும் நல்ல நகைச்சுவையைத் தந்திருக்கிறார் சதீஷ்.

ஆங்கிலம் தொடங்கி, தமி ழின் ‘புதிய முகம்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் முகமாற்று சிகிச்சையால், ஒருவன் வேண்டாத சிக்கல்களுக்கு ஆளாகிற கதை என்ற வகையில் மறுபடி திரைக்குத் திரும்பி வந்திருக்கும் ‘பூமராங்’, காலத்துக்கேற்ற திரைக்கதையால் மட்டுமே சமாளித்து நிற்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x