Last Updated : 08 Mar, 2019 10:22 AM

 

Published : 08 Mar 2019 10:22 AM
Last Updated : 08 Mar 2019 10:22 AM

மரியாதை ஜாஸ்தியா இருக்கு தம்பி - நம்பியார் குறித்து பாக்யராஜ் பேட்டி

''டைட்டில்ல இந்த அளவுக்கு மரியாதை கொடுக்கணுமா. இது ஜாஸ்தியா இருக்குப்பா'' என்று கூச்சத்துடன் சொன்னார் நம்பியார் சார் என்று நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் கே.பாக்யராஜ்.

நடிகர் எம்.என்.நம்பியார் பிறந்த நாள் நேற்று (மார்ச் 7ம் தேதி). மேலும் இது நம்பியாரின் 100-வது பிறந்தநாள்.

இதையொட்டி இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜிடம் நம்பியார் தொடர்பான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளக் கேட்டோம்.

பாக்யராஜ், நம்மிடம் தெரிவித்ததாவது:

'' ’தூறல் நின்னுபோச்சு’ படத்தின் குஸ்தி வாத்தியார் கேரக்டருக்கு எம்.என்.நம்பியார்தான் பொருத்தமாக இருப்பார் என்று கதை பண்ணும்போதே முடிவெடுத்துவிட்டேன். அதேபோல் அவரும் ஒருவழியாக சம்மதித்தார்.

‘ஏம்பா, கம்புச்சண்டைலாம் போடணுமா?’ என்று கேட்டார். ‘இந்த கத்திச்சண்டை ஓகே. கையால சண்டை போடுறதும் நல்லாப் பண்ணிருவேன். இந்தக் கம்புச் சண்டைலாம், உங்க தலைவரு (எம்.ஜி.ஆர்) என்னை க்ளோஸப்ல எடுத்துட்டு, சண்டை போடுற மாதிரியே சமாளிச்சிருவாரு. ஏன்னா, எனக்கு இந்த கம்புச்சண்டைலாம் வராதேப்பா’ன்னு நம்பியார் சார் சொன்னார். ’அதெல்லாம் பின்னிருவீங்க சார்’ என்று சொல்லிச் சொல்லித்தான் சண்டைக்காட்சிகளைப் படமாக்கினோம்.

படத்தின் வேலைகள் முடிந்து, எடிட்டிங் ஒர்க் நடந்துட்டிருந்துச்சு. அப்ப நம்பியார் சார் போன் பண்ணினார். ‘ஏம்பா... நாளன்னிக்கி நான் வெளிநாடு போறேன். போனா வர்றதுக்கு ஒண்ணரை மாசமாவும். அதுக்குள்ளே படம் ரிலீஸாயிரும். அப்ப நான் இங்கே இருக்கமாட்டேன். எடிட்டிங் ஒர்க்கெல்லாம் முடிஞ்சிருச்சா. படத்தை பாத்துட்டு ஊருக்குப் போகலாம்னு ஆசை’ன்னு சொன்னார்.

அவருக்காகவே வேற வேலையையெல்லாம் ஓரமா வைச்சிட்டு, நைட் அண்ட் டே இந்தப் படத்தோட வேலையைப் பண்ணினேன். மறுநாள் காலையில 7.30 மணிக்கு, பிரசாத்ல அவருக்கு படத்தைப் போட்டுக் காட்டினேன். படத்தைப் பாத்துட்டு அப்படியே என்னைக் கட்டிப்புடிச்சிக்கிட்டார். அவரோட முகத்துல ஒரு குழந்தையைப் போல ஒரு குஷி.

அப்புறமா, ''ஏன் தம்பி. டைட்டில்ல இப்படிப் பண்ணிருக்கியே. ஓவர் மரியாதை மாதிரி இருக்கே. பரவாயில்லயா?''ன்னு கேட்டாரு. ''நீங்கள்லாம் அந்தக் காலத்து நடிகர். எவ்ளோ அனுபவம் இருக்கு. உங்களுக்கு இப்படி மரியாதை கொடுக்காம, வேற யாருக்கு சார் கொடுக்கறது?''ன்னு சொன்னேன்.

’தூறல் நின்னு போச்சு’ படத்துல டைட்டில்ல, முத எடுத்ததுமே, ‘மாறுபட்ட வேடத்தில் எம்.என்.நம்பியார் அவர்களுடன்’ன்னு போட்டிருப்பேன். அதுக்குப் பிறகுதான் எம்பேரு, சுலக்‌ஷணா பேரு, எல்லார் பேரும் வரும். அப்படியொரு மரியாதைக்குரிய அற்புதமான மனிதர், மிகச்சிறந்த நடிகர் நம்பியார் சார்''.

இவ்வாறு கே.பாக்யராஜ் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x