Last Updated : 12 Mar, 2019 09:18 PM

 

Published : 12 Mar 2019 09:18 PM
Last Updated : 12 Mar 2019 09:18 PM

தேர்தல் வரை ஓய்வின்றி படப்பிடிப்பு: நேர்கொண்ட பார்வை படக்குழு திட்டம்

ஏப்ரல் 2-ம் வாரம் வரை தொடர்ச்சியாக ஓய்வின்றி படப்பிடிப்பு நடத்த 'நேர்கொண்ட படக்குழு' திட்டமிட்டுள்ளது.

இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். 'நேர்கொண்ட பார்வை' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. நீதிமன்றம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே ஹைதராபாத்தில் தான் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ஏப்ரல் 2-ம் வாரம் வரை எவ்வித ஓய்வின்றி தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறும் என்று 'நேர்கொண்ட பார்வை' படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வைத்து பார்த்தால், மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தான் படக்குழு திரும்பும் என தெரிகிறது.

மேலும், மே 1-ம் தேதி வெளியீட்டிலிருந்து பின்வாங்கிவிட்டது படக்குழு. விரைவில் புதிய வெளியீட்டு தேதியையும் அறிவிக்க திட்டமிட்டு வருகிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். யுவன் இசையமைத்து வருகிறார்.

'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிக்கும் படத்திலேயே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அஜித். இதன் இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x