Published : 24 Mar 2019 01:06 PM
Last Updated : 24 Mar 2019 01:06 PM

நயன்தாரா குறித்து சர்ச்சைப் பேச்சு: மீண்டும் சிக்கலில் ராதாரவி

'கொலையுதிர் காலம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, மீண்டும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார் ராதாரவி.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொலையுதிர் காலம்'. இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது.

இவ்விழாவில் படத்தின் இயக்குநரே கலந்து கொள்ளவில்லை. மேலும், இயக்குநர் கரு.பழனியப்பன், ராதாரவி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட சில திரையுலகினர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

ராதாரவி, இவ்விழாவில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். நயன்தாரா குறித்து அவர் பேசியுள்ளதாவது:

''எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் திரையுலகில் நிலைப்பதே பெரிய விஷயம். அவரைப் பற்றி வராத செய்தியே கிடையாது. அதெல்லாம் தாண்டி நிற்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை 4 நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள்.

நயன்தாரா ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு புறம் சீதாவாகவும் நடிக்கிறார். இப்போது சீதாவாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். முன்பெல்லாம் சீதாவாக நடிக்கவேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவைத் தான் தேடுவார்கள். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்''.

இவ்வாறு ராதாரவி பேசியுள்ளார்.

இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் வெளியாகி, பலரும் ராதாரவியை சாடி வருகிறார்கள். இது தொடர்பாக ஏன் நடிகர் சங்கம் இன்னும் மவுனமாக இருக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x