Published : 07 Mar 2019 02:49 PM
Last Updated : 07 Mar 2019 02:49 PM

என் கருத்து என்னுடனே இருக்கட்டும்: கங்கணா கருத்துக்கு அலியா பட் பதில்

எனக்கென ஒரு கருத்து இருக்கிறது ஆனால் அது எனக்குள் இருக்கட்டும் என கங்கணா ரணவத் பற்றிய கேள்விக்கு அலியா பட் பதிலளித்துள்ளார்.

'மணிகர்னிகா' படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகை கங்கணா ரணாவத், பாலிவுட் நட்சத்திரங்கள் யாரும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. அரசியல் விஷயங்களில் தலையிடுவதில்லை என விமர்சித்திருந்தார்.

மேலும் நடிகர் ரன்பீர் கபூர் தான் அரசியல் பற்றி பேச விரும்பவில்லை என்று ஒரு பேட்டியில் சொன்னதையும் கடுமையாகச் சாடியிருந்தார். இது நமது நாடு. இங்கு நாம் வாழ்கிறோம். நம் மக்களின் பணத்தில் தான் பென்ஸ் காரில் உட்கார்கிறோம். எனவே நாம் பேச வேண்டும் என்று கங்கணா கூறியிருந்தார். 

முன்னதாக, அலியா பட் நடித்த 'ராஸி', ஆமிர்கான் நடித்த 'தங்கல்' படங்களின் பிரத்யேகத் திரையிடலுக்கு நான் சென்றிருந்தும், ஆமிர் கான், அலியா பட் என யாரும் 'மணிகர்னிகா' பிரச்சினையில் என்னை ஆதரித்துப் பேசவில்லை என்றும் கங்கணா குற்றம் சாட்டியிருந்தார்.

இது குறித்து அலியா பட்டிடம் கேட்கப்பட்ட போது, "கங்கணா பேசுவது போல கண்டிப்பாக என்னால் வெளிப்படையாகப் பேச முடியாது. அந்த வெளிப்படைப் பேச்சுக்காக நான் அவரை மதிக்கிறேன். அவர் சொன்னது சரியாகக் கூட இருக்கலாம். நாங்கள் சில சமயம் வெளிப்படையாக இருப்பதில்லை. இந்த உலகத்தில் ஏற்கெனவே நிறைய கருத்துகள் உள்ளன. உன் ஒரு கருத்து இல்லாமல் இருந்தால் நல்லதுதான் என்று என் தந்தை அடிக்கடி சொல்வார். எனவே, எனக்கென ஒரு கருத்து உண்டு. ஆனால் நான் அதை எனக்குள் வைத்துக் கொள்கிறேன். ஆனால் கங்கணாவுக்குப் பாராட்டுகள். அவர் உண்மையிலேயே நன்றாகப் பேசுகிறார்" என்று பதிலளித்துள்ளார்.

அலியா பட்டின் இந்த பதில் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x